பிரேக் கிடைக்கும்னு காத்திருக்கிறேன்!

பிரேக் கிடைக்கும்னு காத்திருக்கிறேன்!
Updated on
1 min read

“விஜய் சேதுபதி, தினேஷ்னு புதுமுகங்களை அங்கீகரித்து வாழ்த்தும் தமிழ் சினிமா, நிச்சயம் என்னையும் கொண்டாடும்” - நம்பிக்கையோடு பேசுகிறார் விஷ்வா. 'ஒரு மழை நான்கு சாரல்' படத்தில் சினிமா உலகில் உதவி இயக்குனர்களின் வலிகளை அழுத்தமாக நடிப்பில் வெளிப்படுத்திய இளம் ஹீரோ. இவர் நடித்த 'முத்து நகரம்' இந்த வாரம் ரிலீஸாக இருக்கிறது. அதுதவிர, தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாராகும் படத்திலும் திறமை காட்டி வருகிறார்.

‘‘நான் சென்னைப் பையன்தான். கிண்டி பக்கத்துல இருக்குற மணப்பாக்கத்துல தான் பொறந்து வளர்ந்தேன் . பாலிடெக்னிக் படிச்சு முடிச்சதும் சினிமாதான் என் உலகம்னு முடிவு பண்ணிட்டேன். வெறும் ஆர்வம் மட்டுமே இருந்தா போதாதுன்னு அதற்கான தகுதிகளையும் வளர்த்துக்கிட்டேன். டான்ஸ், ஃபைட், நடிப்புன்னு கத்துகிட்டதும் வாய்ப்புகள் தேடினேன். பல சிரமங்களுக்குப் பிறகு ‘ஒரு மழை நான்கு சாரல்’ படத்துல நடிச்சதுல ஓரளவுக்கு பெயர் கிடைச்சது. இப்போ ரிலீஸாகப் போற ‘முத்து நகரம்’ படம் நிச்சயம் எனக்கான அடையாளத்தைக் கொடுக்கும். படத்துல எனக்கு ஆட்டோ டிரைவர் கேரக்டர். காதலைத் தேடிப் போற நானும், என் நண்பர்களும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுறோம், அதுல இருந்து எப்படி மீண்டும் வர்றோம்ங்கிறதுதான் கதை.

தமிழ், தெலுங்குன்னு இரு மொழிகளில் வெளியாக இருக்குற படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கிராமத்துல இருந்து நகரத்துக்கு வர்ற மக்கள் என்ன மாதிரியான பிரச்சினைகளைச் சந்திக்குறாங்கன்னு சொல்றதுதான் படத்தோட லைன்.

கிராமத்துப்பையன், வேலை செய்யும் இளைஞன், ஸ்டைலிஷான நெகட்டிவ் ஹீரோன்னு மூணு விதமா நடிச்சிருக்கேன். எனக்கு பெரிய பிரேக் கிடைக்கும்னு நான் ரொம்பவே எதிர்பார்க்குறேன். ’’ என்கிறார் விஷ்வா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in