ஆதாரமற்ற புகார் கூறினால் சட்டப்படி நடவடிக்கை: நடிகை பாவனா எச்சரிக்கை

ஆதாரமற்ற புகார் கூறினால் சட்டப்படி நடவடிக்கை: நடிகை பாவனா எச்சரிக்கை
Updated on
1 min read

நடிகை பாவனாவை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டை நடிகர் திலீப் வன்மையாக மறுத்தார். அத்துடன் பாவனா கடத்தல் தொடர்பாக கைதான முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் மீது நடிகர் திலீப் போலீஸில் புகார் அளித்தார். இவ்வழக்கில் என்னைச் சம்பந்தப்படுத்தாமல் இருக்க பல்சர் சுனில் பணம் கேட்டு மிரட்டினார் என அதில் தெரிவித்திருந்தார். திலீப்பின் நண்பரும், நடிகருமான சலீம்குமார், ‘‘முதலில் நடிகை பாவனாவிடமும், பல்சர் சுனிலிடமும் தான் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியாகும்’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகை பாவனா நேற்று எச்சரித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இவ்வழக்கு தொடர்பாக பலரது பெயர்கள் அம்பலமாகி வருகின்றன. ஊடகங்கள் மூலமாகவே வழக்கில் தொடர்புள்ளவர்கள் யார் என்பதை அறிந்து வருகிறேன். குறிப்பிட்ட நபர்களைத் தண்டிக்கும்படியோ அல்லது பாதுகாக் கும்படியோ போலீஸாரிடம் நான் எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in