

'மெட்ரோ' சிரிஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இயக்குநர் தரணீதரன்
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'மெட்ரோ' படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் சிரிஷ். தனது அடுத்த படத்துக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்.
அதில் இயக்குநர் தரணீதரன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, நவம்பர் மாதம் முதல் தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். 'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தரணீதரன் என்பது நினைவுக் கூறத்தக்கது.
இப்படம் குறித்து சிரிஷ் "தரணீதரன் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முழுக்க ஒரு கொலையைச் சுற்றியிருக்கும் மர்மங்களை வைத்து திரைக்கதை அமைத்திருந்தார். நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். என்னோடு நடிப்பவர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. முழுக்க சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
எனது முந்தைய படத்தின் பாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இப்படத்தின் கதாபாத்திரம் இருக்கும்" என்று தெரிவித்தார்.