Last Updated : 18 Apr, 2015 05:06 PM

 

Published : 18 Apr 2015 05:06 PM
Last Updated : 18 Apr 2015 05:06 PM

காஞ்சனா-2 : முதல் பார்வை

'முனி' , 'காஞ்சனா' படங்கள் வரிசையில் அடுத்த படம், ராகவா லாரன்ஸ் இயக்கும் படம், காமெடி கலந்த ஹாரர் படம் என்ற இந்த காரணங்களே 'காஞ்சனா- 2'வைப் பார்க்க வைத்தது.

'முனி', 'காஞ்சனா'வுக்குக் கிடைத்த பாஸிடிவ் கமென்ட் 'காஞ்சனா- 2'வுக்குக் கிடைக்குமா?

கதை என்ன?

'முனி', 'காஞ்சனா' பார்த்தவர்கள் அடுத்த பார்ட் என்பதால் இந்தப் படத்தின் கதையைக் கேட்க மாட்டார்கள் என்பது குழந்தைகளுக்குக் கூட தெரிந்த விஷயம்.

டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் டிவி ஷோவுக்காக டாப்ஸியுடன், ராகவா லாரன்ஸ் அண்ட் கோ கடற்கரையை ஒட்டிய பங்களாவில் தங்குகிறார்கள்.

உடான்ஸாக ஒரு பேய்க்கதையை கிரியேட் பண்ண, அங்கு நிஜமாகவே ஒரு பேய் இருக்கிறது. பேய்க்கும், அவர்களுக்கும் என்ன ஆச்சு? இதான் படத்தின் லைன்.

மதுரை ராமர் ''என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என்னப்பா இப்படி கட்டிப்பிடிக்குறீங்களேப்பா?'' என வசனம் பேசும்போது தியேட்டர் முழுக்க சிரிப்பலை.

அதிரடி கிளப்பும் இசையில் மாஸ் ஹீரோ ரேஞ்சில் அட்டகாசமாக என்ட்ரி ஆகும் ராகவா லாரன்ஸ் டான்ஸூக்கு ரசிகர்களின் கை தட்டல் காதைக் கிழித்தது. அவர் தம்பி எல்வினும் சேர்ந்து ஆடினார்.

பேய் என்றால் பம்மிப் பதுங்கி, பாத்ரூமுக்குக் கூட வாட்ச் மேன் வைக்கும் பயந்தாங்கொள்ளி கேரக்டரில் அப்படியே வழக்கம்போல நச்செனப் பொருந்திவிடுகிறார் ராகவா லாரன்ஸ்.

இயக்குநர் ராகவா லாரன்ஸ் பழைய கல்லில், சுட்ட தோசையையே திருப்பி சுடுகிறார். மாவை மட்டும் கொஞ்சம் மாற்றி இருக்கிறார்.

ரியாக்‌ஷன்கள், பயம் கலந்த சுபாவம் , கமென்ட் அடிப்பது என லாரன்ஸின் நடிப்பை ரசிகர்கள் ரொம்பவே என்ஜாய் செய்தனர்.

இன்னா மச்சான் எதுவும் புதுசா இல்லையே... அப்படியே 'காஞ்சனா' எஃபக்ட் இருக்கே என பின் சீட்டில் இருந்தவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

அறிமுகக் காட்சியில் டாப்ஸி க்யூட். ஆனால், பேயாக மாறும்போது பெரிதாய் பயம் வரவில்லை. அந்த பிஞ்சு முகத்துக்கு பேய் மேக்கப்பா என்று பக்கத்தில் இருந்தவர் சலித்துக்கொண்டார்.

மயில்சாமியுடன் ராகவா லாரன்ஸ் பேசுவதைப் பார்த்து 'அவனா நீ' என்ற ரேஞ்சில் மனோபாலாவும், சாம்ஸூம் அலறும் காட்சிகள் கிச்சு கிச்சு டைப்.

ஸ்ரீமன் ஃபெர்பாமன்ஸில் செமத்தியாக ஸ்கோர் செய்துவிட்டார். பேய் பட ப்ராபர்ட்டிக்கு பூஜா, மதுமிதா,மனோபாலா, சாம்ஸ் , சுஹாசினி ஆகியோர் ஓ.கே ரகம்.

காமெடியோடு, பயம் வரவைக்க வேண்டும் என்பதற்காக இரண்டையும் பேலன்ஸ் பண்ண முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ். அதுவே ஒரு கட்டத்தில் ஒரு காட்சி காமெடி, ஒரு காட்சி த்ரில்லர் என்ற ஃபார்முலாவுக்குள் பயணிக்கிறது.

ரசிகர்கள் எப்போதெல்லாம் பயப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் சத்தம் போட்டு கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். பயத்தை மறைப்பதற்காகவும் ரசிகர்கள் சத்தம் போட்டதுதான் ஹைலைட்.

இடைவேளைவரை இந்த காமெடி - பயம் என்ற ஆடு புலி ஆட்டமே தொடர்ந்தது. இதனால் பாப்கார்ன் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.

டெம்ப்ளேட் வில்லனாக ஜெயப்பிரகாஷ். கொடுத்த வேலையை சரியாய் செய்கிறார்.

மொட்டை சிவா கேரக்டரில் நடித்திருக்கும் லாரன்ஸ் மாஸ் ஹீரோ எஃபக்டில் பன்ச் பேசுகிறார்.

''நீ மோசமானவன்னா நா ரொம்ப மோசமானவன்

நீ பொறுக்கின்னா நா கேடுகெட்ட பொறுக்கி

நீ மாஸ்னா நா பக்கா மாஸ்'' என பேசும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.

நித்யாமேனன் கொஞ்ச நேரமே வந்தாலும் நடிப்பில் நிறைவு செய்கிறார்.

பாட்டோ, டான்ஸோ ஈர்க்கவே இல்லை. இசை என்று காது கிழிய இரைச்சலைக் கூட்டி இருக்கிறார்கள். பல முக்கியக் காட்சிகளில் இசை இம்சை.

ஃபிளாஷ்பேக் காட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 'முனி' ராஜ்கிரண் ஃபிளாஷ்பேக், 'காஞ்சனா' சரத்குமார் ஃபிளாஷ்பேக் தந்த தாக்கம் 'காஞ்சனா-2'ல் இல்லை. அதனால்தானோ என்னவோ காமோசோமேவென்று காட்சிகள் நகர்கின்றன.

கிளிஷேவான ஃபிளாஷ்பேக் காட்சியால் அலுப்பும், சலிப்புமே மிஞ்சுகிறது. அதுவும் இழுவையாக இழுப்பது முடியல சாரே...

ஏழு வயது குழந்தை முதல் 80 வயது கிழவி வரை லாரன்ஸ் போடும் கெட்டப் எந்த விதத்திலும் உதவவில்லை.

வழக்கம் போல, கிளைமாக்ஸூக்கு முன் ஒரு பாடல் காட்சி. வழக்கமான முடிவு.

ஆனால், காட்சிகளின் நேர்த்தியில் லாரன்ஸ் ரொம்பவே கவனமில்லாமல் எடுத்திருக்கிறார். லாஜிக், மேஜிக் என எதையும் யோசிக்காமல் அவசர கதியில் எடுத்திருக்கிறார்.

படம் முடிந்து மூன்றாவது தளத்தில் இருந்து தரை தளம் வரும் வரைக்கும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க காதைக் கொடுத்தோம்.

''முதல் பாதி ஓகே. இரண்டாம் பாதி இழுவை''

''காமெடி இருப்பதால் படம் பார்க்கலாம்''

''முதல் இரண்டு படங்களில் இருந்த பிளாஷ்பேக் மாதிரி இதில் இல்லை.''

''சுவாரஸ்யமும். விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை.''

''சென்டிமென்ட் இல்லாத கமர்ஷியல் கிளைமாக்ஸ்''

''கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.''

''ரத்தம்...சத்தம்... குழந்தைகள் பார்க்க முடியாது போல...''

''அம்மா கோவைசரளாவுக்கு கூட லோ ஹிப் சீன் வைப்பது அநியாயம்.''

ரசிகர்களுக்கு ஒரு செய்தி: இதைத் தொடர்ந்து 'முனி - 4' படமும் வரப்போகிறது. இது இனிப்பான செய்தியா? கடுப்பான செய்தியா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x