மோடி தலைமையில் கமலுக்கு பாராட்டு விழா: விஷால் கோரிக்கை

மோடி தலைமையில் கமலுக்கு பாராட்டு விழா: விஷால் கோரிக்கை
Updated on
1 min read

செவாலியே விருது பெற்றிருக்கும் கமலுக்கு நடைபெறவுள்ள பாராட்டு விழாவுக்கு பிரதமர் மோடி தலைமையேற்க விஷால் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படத் துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிகழ்வு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் விஷால் பேசும் போது, "ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வரும் நிலையில், தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைந்த வரி விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். திருட்டு விசிடி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ISP (Internet Service Provider) தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் தலையீடு இருந்தால் வெகுவிரைவில் திருட்டு விசிடியை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளோம்.

ப்ரெஞ்ச் அரசு கமலுக்கு செவாலியே விருது கொடுத்து கவுரவித்துள்ளது. அதற்கு இந்திய திரையுலகம் சார்பில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது விருப்பம். அந்த விழா பிரதமர் மோடி தலைமையில் நடந்தால் நன்றாக இருக்கும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்" என்று தெரிவித்தார் விஷால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in