

வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.
‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு கமல்ஹாசன் கடந்த மாதம் சென்னை திரும்பினார். கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் மாடியிலிருந்து படியில் இறங்கும்போது அவர் தவறி விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனை யோடு மருத்துவமனையிலே ஓய்வில் இருந்தார்.
வீட்டுக்கு திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை எழுந்தபோது, மருத்துவர்கள் கண்காணிப்பில் இன்னும் சில நாட்கள் இருக்க வேண்டும் என கமலுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘‘ரசிகர்களுடனும், நண்பர்களுடனும் பகிர ஒரு நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கமல்ஹாசன்.
இந்நிலையில் இன்று காலையில் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார். மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து ஒய்வெடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகே படப்பிடிப்பில் பங்கேற்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது.