Published : 26 Sep 2013 09:48 AM
Last Updated : 26 Sep 2013 09:48 AM

விக்ரம் தான் எனக்கு ரோல் மாடல்!

“சார். எங்களோட ரெண்டரை வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி. படம் முடிஞ்சதும் மக்கள் எழுந்து நின்னு கைதட்டுறது தான். என்னோட சினிமா நண்பர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் எல்லாரும் படத்துல என் நடிப்பை பார்த்து பாராட்டினாங்க” என ஷாமிடமிருந்து அருவி போல் கொட்டுகிறது வார்த்தைகள். பேச்சில் அவ்வளவு சந்தோஷம். '6 மெழுகுவர்த்திகள்' படத்திற்கு கிடைத்த வெற்றி, சக நடிகர்கள், ஏற்ற இறக்கத்திலிருக்கும் திரையுலக பயணம், ஆர்யாவுடனான நட்பு என நீண்ட உரையாடல்களிலிருந்து..

மொதல் படமே ரெண்டு உச்சகட்ட ஹீரோயின்ஸ்... ( சிம்ரன், ஜோதிகா). ரொம்ப வித்தியாசமான கதைன்னு பரபரன்னு உள்ள வந்தீங்க.. அப்பறம் கேரியர்ல பெரிய ட்ராப்.. தெலுங்கு பக்கம் ஹிட்.. மறுபடியும் தமிழ்..ரங்கராட்டினமா போகுதே உங்க மார்க்கெட்..?

12பி படத்துல சிம்ரன் ஜோதிகாவோடு நடிச்சது எல்லாம் மறக்க முடியாது. அப்புறமா சில படங்கள் நமக்கு செட்டாகுமானு யோசிக்காம ஒத்துக்கிட்டது உண்மைதான். ஆனாலும் 12பி, லேசா லேசா, இயற்கை அப்படினு சில படங்களல மட்டுமே எனக்கு கரெக்டா அமைஞ்சது. தெலுங்குல 'கிக்' மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. இப்போ '6 மெழுகுவர்த்திகள்' என வாழ்நாள்ல மிக முக்கியமான படமா அமைஞ்சிருக்கு.

முன்னணி ஹீரோக்கள் பலருக்கு பேமிலி பேக்ரவுண்ட் இருக்கு. அப்பா, அண்ணன் அப்படினு யாராவது குடும்பத்துல ஒருத்தர் பீல்ட்ல துணையா இருப்பாங்க. ஆனா, எனக்கு அப்படியில்லை. என்னை மட்டுமே நம்பி களத்துல இருக்கேன்.

பலரும் ஷாமை ராசியில்லாத நடிகர் அப்படினு சொன்னாங்க.. அவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றீங்க?

“ஏ.சி ரூமுக்குள உட்காந்துகிட்டு ஆயிரம் பேசலாம். ஆனால் களத்துல இறங்கினா தான் உண்மையான வலி தெரியும்” இது தான் என்னோட பதில்னு எழுதிக்கோங்க.

எப்படி அமைஞ்சது '6 மெழுகுவர்த்திகள்'? இந்த படத்துக்கு ஷாம் வேணும்னு டைரக்டருக்கு தோண வெச்சதே உங்க வெற்றி தான்.. இல்லையா?

'கிக்' படத்தை பாத்துட்டு துரை பேசினார். உன்னை வித்தியாசமா யூஸ் பண்ணுருக்காங்கனு பாராட்டினார். அப்பறம் ஒருநாள் '6 மெழுகுவர்த்திகள்' கதையை சொன்னார். அப்பவே முடிவு பண்ணிட்டோம். இந்த படம் நல்ல தயாரிப்பாளர் கைல கிடைச்சா மட்டும் தான் நல்லபடியா வரும்னு. உடனே எங்க அண்ணன் கிட்ட பேசி நானே தயாரிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

ஏன்னா படத்துக்காக ரெண்டரை வருஷம் வெயிட் பண்ணனும். வேற ஒரு தயாரிப்பாளர் இதுக்கு தயாராக இருப்பாங்களானு தெரியல. அதான் நானே தயாரிப்பாளரா களத்துல இறங்கினேன். க்ளைமாக்ஸ் காட்சியை பாத்துட்டு, மக்கள் எழுந்து நின்னு கைதட்டும்போது சந்தோஷமாயிடுச்சு.. வலியெல்லாம் பறந்தே போச்சு.. எங்களோட ரெண்டரை வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு அது.

மொதல்ல மாடலிங், அப்பறம் சின்ன ரோல்.. அப்பறம் ஹீரோ.. அப்பறம் கன்னடப் படம், தெலுங்குல 'கிக்'.. மறுபடியும் தமிழ்ல சூப்பர் ரோல் பண்ண வாய்ப்பு.. அடுத்த மூவ் ரொம்ப ஜாக்கிரதையா எடுத்து வெக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கீங்க.. இப்ப எப்படி இருக்கு?

ரொம்ப ரொம்ப பயமா இருக்கு. தமிழ்ல அடுத்ததா புதுமுக இயக்குநர் ஒருத்தர் படத்துல நடிக்கிறேன். '6 மெழுகுவர்த்திகள்' படத்துக்கு அப்புறம் வர படம் அப்படிங்கிறதுனால ரொம்ப யோசிச்சு ஒத்துக்கிட்டேன். நல்ல ஒரு பேமிலி எண்டர்டெய்னர். அதுல ஒரு புதுமை பண்ணிருக்கோம்.

தெலுங்குல 'கிக்' இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் 'RACE GAURAM' படத்துல நடிக்கிறேன். தமிழ்ல ' பந்தய குதிரை'னு அர்த்தம். நானும் அல்லு அர்ஜுனும் அண்ணன் - தம்பியா நடிக்கிறோம். தமிழ்ல தான் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கறது கம்மியா இருக்கு.. ஆனா தெலுங்குல அப்படியில்லை. கதைக்கு தேவைன்னா சேர்ந்து நடிக்கிறாங்க.

'6 மெழுகுவர்த்திகள்' பார்த்துட்டு சுதீப் உங்களை ரொம்ப பாராட்டியிருந்தார்.. இன்னும் நிறைய பேரோட பாராட்டுல நனைஞ்சிருப்பீங்களே?

சார்.. அதை வார்த்தைகளா வர்ணிக்க முடியாது. வேற வேற தியேட்டர்ல 8 ஷோ பாத்தேன். படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி முடிந்தவுடன், கைத் தட்னாங்க.. வெளியே வர்றப்போ கட்டிப்பிடிச்சு பாராட்டினாங்க, நிறையப் பேர் அழுதுகிட்டே பாராட்டினாங்க. ஷாமுக்கு கிடைத்த வெற்றியா நான் பாக்கல. படத்துக்கு கிடைச்ச வெற்றியா தான் பாக்கறேன்.

படம் முடிஞ்சவுடன், சுதீப் கட்டிப்பிடிச்சு 'பின்னிட்டடா'ன்னார். சிம்ரன் மேடம் 'Awesome.. Awesome'னு பாராட்டினாங்க. விஜய் சேதுபதி ஒரு 45 நிமிஷம் படத்துல ஒவ்வொரு சீனையும், வசனங்களோட சொல்லி, இந்த சீனுக்குல்லாம் கண்டிப்பா ரசிகர்கள் பாராட்டுவாங்க பாருன்னார். சீமான் அண்ணன், சசி அண்ணன் எல்லாருமே 'தம்பி.. என்னடா இப்படி உழைப்பை கொட்டிருக்க..'னு தட்டிக் கொடுத்தாங்க.

ஆர்யா, பரத் எல்லாருமே இந்திய சினிமாவோட 100ம் ஆண்டு விழாவுக்காக டான்ஸ் ரிகர்சல் பண்ணிட்டு இருந்ததுனால. “ டேய்.. படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸாமே.. சூப்பர்டா.. படம் பாத்துட்டு கூப்பிடுறேன்”னாங்க.. எனக்கு மனசு பூரா பூ பூத்த மாதிரி இருக்கு.!

விக்ரமுக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. விக்ரமுக்கு 'சேது', ஷாம்முக்கு '6 மெழுகுவர்த்திகள்'னு சொல்லலாமா..?

இப்படித்தான் நிறைய பேர் கேட்கறாங்க. ஏன்னு தெரியல. விக்ரம் சார் எங்கேயோ இருக்கார். நான் எங்கேயோ இருக்கேன். அவர் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரெஷன். அவருடைய வசன உச்சரிப்பு, நடை, உடை எல்லாத்தையும் பாத்து ரசிச்சிருக்கேன். எல்லாருமே இப்படி கேட்கறப்ப சந்தோஷமா இருக்கு. அதே நேரத்துல கொஞ்சம் பயமா இருக்கு.

படத்தை தெலுங்குல ரிலீஸ் பண்றாங்களா?

ஆமா.. ஒரே தேதில ரிலீஸ் பண்ற ப்ளான் தான். ஆனா தெலங்கானா பிரச்சனையால படத்த வாங்கினவங்க இப்போதைக்கு ரிலீஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சீக்கிரமே தெலுங்குலயும் வெளியாகும். நான் அடுத்து தமிழ்ல பண்ணப்போற படம், தெலுங்குக்கும் சேர்த்து தான் ப்ளான் பண்றோம்.

படத்துக்காக நீங்க பட்ட கஷ்டத்தை வீட்டுல இருக்கறவங்க பாத்துட்டு என்ன சொன்னாங்க.. உங்க மனைவி காஸிஸ், பொண்ணு சமைரா ரியாக்‌ஷன் என்ன?

படம் பாத்துட்டு எங்கம்மா தான் கட்டிப்பிடிச்சு அழுதுட்டாங்க. ரொம்ப பாராட்டினாங்க. அந்த நாள மட்டும் மறக்கவே மாட்டேன். என் மனைவி எப்போதுமே “ காசு, பணம் ரெண்டாவது.. முதல்ல ஷாம் நல்ல நடிகர் அப்படினு பேர் தான் முக்கியம்”னு சொல்லிட்டே இருப்பாங்க. இந்த படத்தை பாத்துட்டு “ நீங்க நடிகர் ஷாம்னு பேர் வாங்கிட்டீங்க.”னு சொன்னாங்க. அவங்க வாய்ல இருந்து இந்த வார்த்தை கேட்கறப்ப எதையோ சாதிச்சுட்டோம்னு நினைச்சேன். பொண்ணு சமைரா படம் பாக்குறப்போ “ அப்பாவ அடிக்குறாங்க.. அப்பா அழுறார்.. வா வெளியே போலாம்”னு சொல்லிட்டே இருந்தா.

கமல்லேந்து, விக்ரம், ஷாம்னு ஆளாளுக்கு கதைக்காக உடம்பை ஏத்தி எறக்கி பயமுறுத்தறீங்க. சாப்பிடாம, தூங்காமன்னு இவ்ளோ கஷ்டப்படுத்திக்கறீங்க.. இந்த படத்துக்கு ஓகே.. ஆனா அப்பறம் உடம்பு போயிருமேன்னு பதட்டம் இல்லையா?

இப்பவுள்ள சூழ்நிலை அப்படி இருக்கு. என்ன பண்றது.? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுசா ரெண்டு பேர் ஹீரோவா வர்றாங்க. இப்படி இருக்குறப்போ நம்மள இன்னும் நல்லா புரொக்ஜட் பண்ணக்கூடிய நிலைமை. வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க. நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. எது பண்ணனும் நினைக்கிறமோ அத இப்பவே பண்ணிறனும்.

நான் எடுத்த ரிஸ்க் அதிகம் தான். கண்ணு எல்லாம் வீங்க வைச்சு நடிச்சேன். கதைக்கு தேவைப்படுறப்ப செஞ்சு தானே ஆகணும். என்னைவிட '555' படத்துல பரத் எடுத்த ரிஸ்க் அதிகம். அதை நினைக்கறப்ப ரொம்ப பயமா இருந்தது. அவரு எடுத்த ரிஸ்க்கால, உடம்பு உறுப்புகள் கூட பாதிக்கலாம். இருந்தாலும் ரிஸ்க் எடுத்தார். வெற்றியால தான் Fieldல நிலைச்சு நிக்க முடியும்ன்னா எந்த ஒரு ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கேன்.

உள்ளம் கேட்குமே ஆர்யா, ராஜா ராணி ஆர்யா.. வளர்ச்சியை எப்படி பாக்கறீங்க..? நாமும் காமெடி டிராக்லயே போயிருக்கலாமோன்னு தோணிச்சா..?

ஆர்யா எனக்கு நெருங்கிய நண்பன் தான். சினிமாவுக்கு வந்தப்பவே சும்மா இருக்குற நேரத்துல நிறைய பேரைப் போய் பார்ப்பான். அவனுக்கு என்ன வரும் அப்படினு முடிவு பண்ணிட்டு அதுல கரெக்டா போயிட்டு இருக்கான். “என்னடா.. நான் நடிச்ச படம் வெளியாகவே மாட்டேங்குது..” அப்படினு வருத்தப்பட்ட காலத்தையெல்லாம் பொறுமையா கடந்து வந்தான். பாலா சார் இயக்கத்துல 'நான் கடவுள்' படத்துல ஆர்யா நடிப்ப பாத்து மிரண்டுட்டேன். ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்ப ஆர்யாவோட 'ராஜா ராணி' படத்துக்காக வெயிட் பண்றேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x