அஞ்சான்: இரட்டை வேடத்தில் சூர்யா

அஞ்சான்: இரட்டை வேடத்தில் சூர்யா

Published on

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'அஞ்சான்' படத்தில் இரண்டு வேடங்களில் சூர்யா நடித்து வருகிறார்.

'சிங்கம் 2' படத்தினைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார் சூர்யா. படத்தின் பெயரை அறிவிக்காமல் படப்பிடிப்பிற்கு கிளம்பினார்கள். மும்பையில் படப்பிடிப்பு தொடங்கியது.

'அஞ்சான்' என்று தலைப்பு முடிவு செய்து அறிவித்தார்கள். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வந்தார். மும்பை நிழல் உலக தாதாவாக சூர்யா நடித்து வருவது உறுதி செய்வதைப் போல புகைப்படங்களை வெளியிட்டார்கள்.

ஆனால், 'அஞ்சான்' படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் சூர்யா. மும்பை நிழல் உலக தாதா வேடத்திலும், மற்றொரு வேடத்திலும் நடித்து வருகிறார். நிழல் உலக தாதா வேடத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்டதைத் தொடர்ந்து அடுத்த வேடத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இரண்டாம் சூர்யாவோடு நடிகர் சூரி நடிக்க இருக்கும் படப்பிடிப்பு 26ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இப்படத்தில் சூர்யா, சமந்தாவோடு மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜாம்வால், ராஜ்பால் யாதவ், தலீப் தகில் உள்ளிட்ட பல இந்தி திரையுலக நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in