

நடிகை தமன்னா, 2005-ம் ஆண்டு வெளியான ‘சந்த் ஷா ரோஷன் செஹ்ரா’ என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு தென்னிந்திய சினிமாவுக்கு வந்த அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது அவர் இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவில் 21 வருடங்களைக் கடந்துள்ள அவர் கூறும்போது, “எனது திரையுலக வாழ்க்கையில் 21 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் நான் மீண்டும் புதிதாகத் தொடங்குவதைப் போன்றே உணர்கிறேன். பல நடிகர்களுக்கு, குறிப்பாக நடிகைகளுக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பதில்லை.
எனது படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் உற்சாகமாக இருக்கிறேன். ரசிகர்கள் என் மீது தொடர்ந்து அன்பைப் பொழிந்து வருகிறார்கள், என்னை அரவணைப்புடன் ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு முக்கிய காரணம், தென்னிந்தியாவில் எனக்குக் கிடைத்த வரவேற்புதான். இந்தியாவின் பிறபகுதிகளில் இருந்தும் எனக்குக் கிடைத்து வரும் இந்த அன்பு உற்சாகமாக உணர வைக்கிறது. இதற்குப் பதிலாக என்ன செய்ய முடியும் என்பதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.