‘நய்யாண்டி’ தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது வழக்கு!

‘நய்யாண்டி’ தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது வழக்கு!
Updated on
1 min read

‘நய்யாண்டி’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சற்குணம் மீது கேரளாவைச் சேர்ந்த மணி சி.கப்பன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

தனுஷ், நஸ்ரியா நடிக்க, சற்குணம் இயக்கிய படம் ‘நய்யாண்டி’. கதிரேசன் தயாரித்திருந்தார். பெரும் சர்ச்சைக்கு இடையே படம் வெளியாகி, படுதோல்வியை சந்தித்தது.

படம் வெளியாகி, தோல்வியடைந்து, திரையரங்குகளில் இருந்து எடுத்து பல நாட்கள் கழித்து கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் மணி சி.கப்பன் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

1993 ஆம் ஆண்டு ஜெயராம், ஷோபனா நடிக்க, ராஜசேனன் இயக்கத்தில் ‘மேலபரம்பில் ஆண் வீடு’ என்ற மலையாளப் படத்தைத் தயாரித்தார் மணி சி.கப்பன். அப்படத்தை விரைவில் சித்திக் இயக்கத்தில் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

இவரிடம் ரீமேக் உரிமையை வாங்காமல் ‘மேலபரம்பில் ஆண் வீடு’ படத்தின் கதையை வைத்து ‘நய்யாண்டி’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். படத்தின் டைட்டிலில் மூலக்கதை ‘மேலபரம்பில் ஆண் வீடு’ குறிப்பிட்டிருந்தார்..

இந்நிலையில் ‘நய்யாண்டி’ படத்தின் கதை, தான் தயாரித்த ‘மேலபரம்பில் ஆண் வீடு’ கதை தான் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், ‘நய்யாண்டி’ படத்திற்கு தடை கோரியது மட்டுமல்லாமல், தனது படத்தின் மூலக்கதை மற்றும் 12 காட்சிகளை இயக்குநர் சற்குணம் காப்பியடித்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

இன்னுமொரு தகவல், பாண்டியராஜன், மோகனா நடிக்க 1995ல் இயக்குநர் சோலைராஜன் இயக்கிய படமான ‘வள்ளி வரப்போறா’ படமும் ‘மேலபரம்பில் ஆண் வீடு’ படத்தின் ரீமேக் தான். அப்படமும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in