ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு பாகுபலி 2வை பாராட்டிய மத்திய அமைச்சர்

ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு பாகுபலி 2வை பாராட்டிய மத்திய அமைச்சர்
Updated on
1 min read

ஹாலிவுட் படங்களோடு ஓப்பிட்டு 'பாகுபலி 2' படத்தை பாராட்டியுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு. இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா,

அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை

தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2'.

இந்தியா மட்டுமன்றி உலகளவில் பல்வேறு வசூல் சாதனைகளை செய்துள்ளது 'பாகுபலி 2'. 'பாகுபலி 2' படத்துக்கு பல்வேறு இந்திய

திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

'பாகுபலி 2' பார்த்துவிட்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு "பாகுபலி 2 படத்தைப் பார்த்தேன். கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. பென்ஹர், டென் கமாண்ட்மென்ட்ஸ் படங்களைப் பார்த்ததபோது பெற்ற அனுபவம் கிட்டியது.

பாகுபலி-2 படம் இந்திய சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. பிராந்திய மொழிப்படம் இத்தகைய சாதனையை செய்திருப்பது பாராட்டுதற்குரியது. ராஜமெளலி இந்திய சினிமாவின் சில தடைகளை தகர்த்தெரிந்திருக்கிறார்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in