ஹாலிவுட்டுக்கு முன்னரே சூர்யா படத்தில்!

ஹாலிவுட்டுக்கு முன்னரே சூர்யா படத்தில்!
Updated on
1 min read

உலகளவில் முதன் முறையாக சூர்யா நடிக்கும் படத்திற்கு ரெட் டராகன் டிஜிட்டல் கேமிரா பயன்படுத்துக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

சூர்யா - லிங்குசாமி இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், அக்டோபர் 15ம் தேதி முதல் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியிருக்கிறது.

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இப்படத்திற்காக டெஸ்ட் ஷுட் நடைபெற்று இருக்கிறது. இப்படத்திற்காக சந்தோஷ் சிவன், ஹாலிவுட்டில் கூட இதுவரை பயன்படுத்தாத ரெட் டராகன் டிஜிட்டல் கேமராவுடன் ஆன்ஜினியக்ஸ் லென்ஸ் வைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இவருக்கு பிறகு ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ரிட்லி ஸ்காட் உள்ளிட்ட பலரும் பயன்படுத்த இருக்கிறார்கள். இந்த புதிய முயற்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

“இந்த முயற்சி முதன் முறையாக சென்னையில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து துவங்கி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

இப்படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி “ எனக்கு சூர்யாவுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. 'வேட்டை' படத்திற்கு பிறகு இப்படத்தின் கதையை மிகவும் நிதானதமாக தயார் செய்திருக்கிறேன். தற்போது நிறைய இளைஞர்கள் வித்தியாசமான கதைகள் மூலமாக அசரடிக்கிறார்கள். அவர்களுடன் போட்டி போடும் வகையில் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறேன். படத்திற்கு இன்னும் தலைப்பிடவில்லை. ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், நாயகியாக சமந்தா, இசைக்கு யுவன், எடிட்டிங் ஆண்டனி என முன்னணி நபர்களை வைத்து படத்தினை உருவாக்க இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

“இப்படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. சின்ன வயதில் 'தளபதி' படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை பார்த்து வியந்திருக்கிறேன். தற்போது அவர் என்னுடைய படத்திற்கு உலகளவில் இதுவரை யாருமே உபயேகிக்காத கேமிரா மூலம் ஒளிப்பதிவு செய்து சந்தோஷமாக இருக்கிறது” என்று புன்னகையும் தெரிவித்துள்ளார் சூர்யா.

அடுத்தாண்டு மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in