Last Updated : 22 Oct, 2013 01:17 PM

 

Published : 22 Oct 2013 01:17 PM
Last Updated : 22 Oct 2013 01:17 PM

யாரைக்கண்டும் பயமில்லை : விஷால் சவால்!

விஷால் தன் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'பாண்டிய நாடு' படத்தினை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். தற்போதுள்ள சூழலில் அவருக்கு கண்டிப்பாக ஒரு ஹிட் தேவைப்படுகிறது. 'வெடி', 'சமர்', 'பட்டத்து யானை' என அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் வரவேற்பைப் பெறவில்லை.

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ வெளியிடப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் தனது 'பாண்டிய நாடு' வெளியீடு குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் விஷால். அப்போது விஷாலின் பேச்சில் தன்னம்பிக்கை தெறித்தது.

“வெளித் தயாரிப்பாளர் தயாரிப்பில்தான் ‘பாண்டிய நாடு‘ படம் உருவாக இருந்தது. சில மனக்கசப்பு காரணமாக அப்படத்தை நானே தயாரிக்க முடிவு செய்தேன். உன்னால் முடியுமா என்றார்கள் சிலர். இன்று அது சாத்தியமாகி இருக்கிறது.

மதுரை பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சுசீந்திரன் இயக்கி உள்ளார். முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார். லட்சுமிமேனன் ஹீரோயின். தொடர்ந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். அடுத்து திரு இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து நடிக்கிறேன்.

எனக்கும் ஆர்யாவுக்கும் உள்ள நட்பு ஆழமானது. எங்கள் இருவரது திருமணத்தையும் ஒரே மேடையில் நடத்த வேண்டும் என்று எங்கள் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் முதலில் ஆர்யாவுக்குத்தான் திருமணம் நடக்கும். பொதுவாக ஆர்யா ஜாலியானவர். பெண்களை கவர்வதில் வல்லவர்.

நடிகையை மணந்தால் என்ன தவறு? என்னைப் பொறுத்தவரை நடிகையை மணக்க விரும்புகிறேன். அவரை தேர்வு செய்துவிட்டேனா? இல்லையா என்பதெல்லாம் ‘பாண்டிய நாடு ’ படம் ரிலீஸாகி வெற்றி பெற்ற பிறகு சொல்வேன்.

அஜீத், கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வந்தாலும், எனது படமும் வெற்றி பெறும் என்பதை இப்போதே என்னால் அடித்துச் சொல்ல முடியும்.அதனால் யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. எனது பாண்டியநாடு வெற்றி பெறப்போவது உறுதி” என கூறினார் விஷால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x