

‘தில்லுக்கு துட்டு’ படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சந்தானம் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’ என்ற திரைப் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மஸ்தான் சர்பூதீன். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
எங்கள் நிறுவனம் சார்பில் ‘ஆவி பறக்க ஒரு கதை’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க திட்டமிட்டு, அதன் இயக்குநராக ராம்பாலா நியமிக்கப்பட்டார். இப்படத்துக்காக ரூ.81 லட்சம் வரை செலவு செய்தேன். ஆனால், உரிய காரணத்தை தெரிவிக்காமல் படம் எடுப்பதை இயக்குநர் ராம்பாலா தவிர்த்தார்.
இந்நிலையில் இயக்குநர் ராம்பாலா ‘ஆவி பறக்க ஒரு கதை’ படத்தின் கதையை, ‘தில்லுக்கு துட்டு’ என்ற தலைப்பில் நடிகர் சந்தானத்தைப் போட்டு படமாக எடுத்துள்ளார்.
இப்படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே ‘தில்லுக்கு துட்டு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை 14-வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி கணபதிசாமி (பொறுப்பு) இந்த வழக்கை விசாரித்து, இவ் வழக்கு விசாரணைக்காக நடிகர் சந்தானம், திரைப்பட இயக்குநர் ராம்பாலா ஆகியோர் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.