

'பாகுபலி 2' படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிவுற்று, வெளியீட்டுக்கு தயாராகியுள்ளதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் தயாரிப்பாளர் ஷோபு.
ஏப்ரல் 28-ம் தேதி வெளியீட்டிற்கான பணியில் தீவிரம் காட்டி வந்தது 'பாகுபலி 2' படக்குழு. DI பணிகள், ஐமேக்ஸ் வெளியீட்டு பணிகள் உள்ளிட்ட பல இடங்களில் இதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டது. இது குறித்து 'பாகுபலி 2' தயாரிப்பாளார் ஷோபு தனது ட்விட்டர் பக்கத்தில், "செய்வதற்கு அதிக வேலை இல்லை என்ற வித்தியாசமான உணர்வோடு கண்விழித்தேன். இப்படி கண்விழித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
வேலைகள் முடிந்து ’பாகுபலி 2’- ஏப்ரல் 28 வெளியீட்டுக்காக தயாராக இருப்பது அற்புதம் என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த சில வாரங்களில் தூக்கமின்றி உழைத்து இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருக்கும் கோடான கோடி நன்றிகள். நான் யாரை சொல்கிறேன் என அவரவருக்கு தெரியும்.
படத்தொகுப்பு, கிராபிக்ஸ், ஒலி, இசை, டப்பிங், டிஐ /கலர் என, பல ஸ்டூடியோக்களிலிருந்து வந்த திறமையான கலைஞர்கள் சரியான நேரத்தில் ஒன்றிணைந்து 'பாகுபலி 2'-வை முடித்துள்ளார்கள். நான் அற்புதம் என்று சொன்னதை புரிந்துகொள்ள ஒரே ஒரு விஷயத்தை சொல்கிறேன்.
கடந்த வாரங்களில் கிராபிக்ஸ் செய்யும் அணி, 1300 ஷாட்டுகளுக்கு மேல் கிராபிக்ஸ் செய்துள்ளனர். 'பாகுபலி' என்ற இந்த பயணத்தில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் நான் சொல்ல நினைப்பது, நன்றி !" என்று தெரிவித்துள்ளார் ஷோபு.
'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2'க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'-ல் விடை தெரியவிருக்கிறது.