ஆணாதிக்க சிந்தனை படைத்தவர்களோடு பணியாற்ற முடியாது: வரலெட்சுமி காட்டம்

ஆணாதிக்க சிந்தனை படைத்தவர்களோடு பணியாற்ற முடியாது: வரலெட்சுமி காட்டம்
Updated on
1 min read

ஆணாதிக்க சிந்தனை படைத்தவர்களோடு என்னால் பணியாற்ற முடியாது என வரலெட்சுமி காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' தமிழில் பெரும் வரவேற்பு பெற்றது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டதால், இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபம் கிடைத்தது.

'அப்பா' வெளியீட்டின் போதே பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமுத்திரக்கனி தெரிவித்தார். முதலாவதாக 'அப்பா' மலையாள ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்து வருகிறார். முதலில் வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படபூஜையில் கலந்து கொண்டார். தற்போது அப்படத்திலிருந்து விலகியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எடுத்திருக்கும் முடிவை ஆதரித்த சமுத்திரக்கனி, ஜெயராமுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆணாதிக்க சிந்தனை படைத்தவர்களுடனும் நற்பாங்கு அற்றவர்களுடனும் என்னால் பணியாற்ற முடியாது" என்று தெரிவித்துள்ளார் வரலெட்சுமி சரத்குமார்.

வரலெட்சுமி விலகலைத் தொடர்ந்து, அக்கதாபாத்திரத்தில் இனியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'ஆகாச மிட்டாயே' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார் சமுத்திரக்கனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in