

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படப்பிடிப்பு, தேதிகள் பிரச்சினை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
'மனிதன்' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் உதயநிதி. இப்படத்தில் உதயநிதியின் நண்பராக விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி, சுமார் ஒரு வாரம் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, "இப்படத்தில் பல்வேறு நடிகர் - நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இதனால் தேதிகள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அனைத்தும் சரி செய்யப்பட்ட பிறகே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்" என்று தெரிவித்தார்கள்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன், விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவிருக்கும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் சுசீந்திரன் என்று தகவல் வெளியாகியுள்ளது.