சரத்குமார்- நெப்போலியன் மீண்டும் இணையும் சென்னையில் ஒரு நாள் 2

சரத்குமார்- நெப்போலியன் மீண்டும் இணையும்  சென்னையில் ஒரு நாள் 2
Updated on
1 min read

'சென்னையில் ஒரு நாள் -2' படத்தில் சரத்குமாரும் நெப்போலியனும் இணைந்து நடிக்கின்றனர்.

சரத்குமாரும், நெப்போலியனும் இணைந்து நடித்த 'தென்காசிப் பட்டணம்', 'ஐயா' போன்ற படங்கள் ரசிகர்களிடம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றவை. இந்நிலையில் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு 'சென்னையில் ஒரு நாள் -2' என்று பெயரிடப்பட்டுள்ளது.

'டிராஃபிக்' என்ற மலையாளப் படத்தின் மறு ஆக்கமாக தமிழில் 'சென்னையில் ஒரு நாள்' படம் உருவானது. சரத்குமார், சேரன், பிரசன்னா, பார்வதி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்த இப்படத்தை ஷாகித் காதர் இயக்கியிருந்தார். உறுப்புதானத்தை வலியுறுத்திய இந்தப் படத்தின் நேர்மையும், உண்மையும் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குநர் ஜெ.பி.ஆர் இயக்குகிறார். ராஜேஷ்குமார் நாவலை அடிப்படையாகக் கொண்டு கதை - திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி, முனீஷ்காந்த், சாதன்யா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in