பவர் ஸ்டாருக்கு சம்பள பாக்கியா? : விஜய் மில்டன் மறுப்பு

பவர் ஸ்டாருக்கு சம்பள பாக்கியா? : விஜய் மில்டன் மறுப்பு
Updated on
1 min read

‘கோலிசோடா’ படத்தில் நடித் ததற்கு சம்பளம் தர மறுக்கிறார்கள் என்று ‘பவர்ஸ்டார்’சீனிவாசன் கூறியுள்ளதை ‘கோலிசோடா’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்கு நருமான விஜய் மில்டன் மறுத் துள்ளார்.

‘லத்திகா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். ‘இன்றைய சினிமா’ என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது :-

சமீபத்தில் வெளியான ‘கோலிசோடா’ படத்தில் நடிக்க என்னிடம் 6 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். மூன்று நாட்களில் நடித்து முடித்தேன். படப்பிடிப்பின் தொடக்கத்தில் நடிப்பதற்காக ஒரு சிறிய தொகையை என்னிடம் கொடுத்தார்கள். மீதி தொகையை பின்னர் தருவதாக கூறினார்கள். அப்போதிலிருந்து பலமுறை கேட்டுள்ளேன். சரியான பதில் எதுவும் இல்லை. ஒருகட்டத்தில் பணத்தை தரமுடியாது யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்துகொள் என்கிறார்கள். உழைப்புக்கான சம்பளத்தை தராமல் ஏமாற்றுவது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ‘கோலிசோடா’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான விஜய்மில்டன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கோலிசோடா படத்துக்கு 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்த ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தார். அந்த காட்சிகளுக்கு டப்பிங் பேச வரவும் மறுத்துவிட்டார். பின்னர், வேறொருத்தரை வைத்து டப்பிங் முடித்திருக்கிறோம். அவர் நடித்த மூன்று நாட்களுக்காக பேசிய தொகையை கொடுத்துவிட்டோம். நடிக்க வராத மூன்று நாட்களுக்கு பணம் கேட்டால் எப்படி கொடுக்க முடியும். இப்போது பரப்பி வரும் புகாரை நடிகர் சங்கம் மூலமாக கொடுத்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. அப்படியே நடிகர் சங்கம் வழியே வந்தாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in