

ரஜினியின் '2.0' படத்தை 100 அடி உயர பலூனில் விளம்பரப்படுத்தி, அதனை பல்வேறு நாடுகளில் பறக்கவிட திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
ஜனவரி 2018-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளது படக்குழு. லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
'2.0' படத்தின் விளம்பரப்படுத்தும் திட்டங்கள் குறித்து லைகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜு மஹாலிங்கம், "’2.0’ வெப்பக்காற்று பலூன் உலகம் முழுதும் பயணிக்கவுள்ளது, உலகம் நெடுகிலும் நடைபெறும் பலூன் திருவிழாவில் இந்த ரஜினி பலூன் காட்சிப்படுத்தப்படும்.
நாங்கள் இந்தப் படத்தை இந்தியத் தயாரிப்பாக பார்க்கவில்லை ஹாலிவுட் படமாக பார்க்கிறோம், எனவே வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டுன் என்று விரும்புகிறோம், இதற்காக 100 அடி உயர வெப்பக் காற்று பலூனுக்கு 8 மாதங்கள் முன்பாக ஆர்டர் செய்தோம். செவ்வாயன்று லாஸ் ஏஞ்சலஸில் ஹாலிவுட் விளம்பரத்தில் இந்தப் பலூன் பறக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்தப் பலூன் லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, தெற்காசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேல் பறக்கவுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களுக்கு இந்த வெப்பக்காற்று பலூனைக் கொண்டு வர தயாரிப்பளர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்போது நாடு முழுவதும் உள்ள பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த பலூன் சவாரியில் பங்குபெறவுள்ளார்கள்