Last Updated : 31 Jan, 2014 09:10 AM

 

Published : 31 Jan 2014 09:10 AM
Last Updated : 31 Jan 2014 09:10 AM

பெங்களூருக்கு ரஜினி ரகசிய பயணம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் வந்த ரஜினிகாந்த் தனது அண்ணன், நெருங்கிய நண்பர்களை சந்தித்தார். தான் படித்த பள்ளிக்கூடம் உள்பட பிடித்த இடங்களுக்கு ரகசியமாக சென்று வந்தார்.

நேற்று காலை அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். இந்த‌ தகவலறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திடீரென வீட்டின் முன்பு குவிந்து, ஆரவாரம் செய்தனர். ரஜினி வீட்டின் பால்கனியில் நின்று, ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

பிறந்து வளர்ந்த பெங்களூருக்கு ரஜினி காந்த் அடிக்கடி ரகசியமாக வந்துபோவது வழக்கம். கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெங்களூர் வருவதை குறைத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவர‌து அண்ணன் சத்தியநாராயணா பெங்களூரில் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்தார். அப்போது நெருங்கிய நண்பர்களை கூட சந்திக்காமல், உடனே சென்னைக்கு கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் கடந்த 27-தேதி ரஜினி தனது நண்பர்கள் 3 பேருடன் ரகசியமாக பெங்களூர் வந்தார். வழக்கமாக அனுமந்த் நகரில் உள்ள சத்திய நாராயணா வீட்டில் தங்கும் ரஜினி, இந்த முறை பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தன‌து இல்லத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இருப்பினும் முதல் வேலையாக, 28-ம் தேதி காலை சத்திய நாராயணா வீட்டிற்கு சென்றார்.

ரஜினியின் வருகையொட்டி அவரின் உறவினர்கள் அனைவரும் சத்திய நாராயணா வீட்டில் கூடினர். அனைவரோடு பேசி மகிழ்ந்த அவர், தனது அண்ணனுடன் நீண்ட நேரம் தனியே பேசி கொண்டிருந்தார்.

படித்த பள்ளியை வலம் வந்தார்

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் கவிப்புரம் குட்டஹள்ளி மண்ணை மிதிக்காமல், திரும்ப மாட்டார். ஏனென்றால் அவர் படித்த மாதிரி கன்னட தொடக்கப்பள்ளி, அவரின் இஷ்ட தெய்வமான கவிகங்காதேஷ்வர் கோயில், உயிர் நண்பன் ராஜ் பகதூர் வீடு என அனைத்தும் அங்குதான் உள்ளது. மாறுவேடத்தில் வலம்வந்ததால் நெருக்கமானவர்களால்கூட ரஜினியை அங்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது, கவிப்புரம் மாதிரி கன்னட தொடக்கப்பள்ளியை ரஜினி பார்த்தார். இந்த‌ பள்ளிக்கூடத்தை கர்நாடக அரசு ரூ.1.53 கோடி செலவில் நவீன வசதிகளோடு புதுப்பித்து வருகிறது.

வறுமையில் வாடிய தனது ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிற்கு சமீபத்தில் பெரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி, அவரது கண்ணீரை ரஜினி காந்தி துடைத்தார். அப்போது ஆசிரியையிடம் தொலைப்பேசியில் பேசிய ரஜினி,' பெங்களூர் வரும்போது நிச்சயம் வீட்டிற்கு வருகிறேன்'என உறுதியளித்தார்.

இப்போது பெங்களூர் வந்த ரஜினி உங்களை சந்தித்தாரா என்று ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிடம் கேட்டோம். 'இல்லை. சிவாஜிக்கு(ரஜினியின் இயற்பெயர்) நிறைய வேலைகள் இருக்கும். அதனால்தான் வரவில்லை.அடுத்தமுறை நிச்சயம் வருவார். இல்லாவிட்டால் பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு வருவார்''என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் அவருடைய நிழலாக இருப்பவர், உயிர் நண்பர் ராஜ் பகதூர் தான். ரஜினியோடு பள்ளியில் ஒன்றாக படித்தது, பேருந்தில் அவர் நடத்துநராக இருந்த போது ஓட்டுநராக இருந்தது ராஜ் பகதூர் தான்.

இந்த முறை கன்னட படமான 'ஒன்வே' வெளியூர் படப்பிடிப்பில் ராஜ்பகதூர் மிகவும் பிஸியாக இருந்தார். அதனால் அவரால் ரஜினியோடு நேரத்தை செலவிட முடிய‌வில்லை.

அதிகாலையிலேயே ரசிகர்கள்!

வழக்கமாக ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் வீட்டில் தங்காமல், வெளியே சுற்றுவார்.ஆனால் இந்த முறை அதிகமாக வீட்டிலே இருந்தார். நேற்று அதிகாலை 6 மணிக்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டு முன்பு கூடி 'தலைவா..தலைவா..'' என உற்சாகமாக ஆரவாரமிட்டனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பல ரசிகர்கள் ரஜினி வீட்டின் மதில் சுவருக்குள் ஏறிக் குதித்தனர்.

மந்த்ராலயத்திற்கு கிளம்பிய ரஜினி

ஒரு கட்டத்தில் ரசிகர்க‌ளின் குரல் அக்கம் பக்கத்து வீட்டாரையும் விழித்தெழ செய்தது. இதனால் ரஜினி தனது வீட்டின் பால்கனிக்கு வந்தார். குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து வணங்கினார். அனைவரையும் பத்திரமாக வீட்டுக்கு போகுமாறு சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டார். ரசிகர்கள் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாததால் ரஜினி வீட்டை விட்டு காரில் புறப்பட்டார். அப்போது கன்னட தொலைக்காட்சி செய்தியாளர் அவரை மறித்து பேட்டி கேட்டார். 'பேட்டியெல்லாம் வேண்டாம்.வழக்கம்போல சும்மாதான் பெங்களூர் வந்தேன்'' என கூறிவிட்டு தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.

ரஜினி மந்த்ராலயத்திற்கு சென்று இருப்ப‌தாக அவருடைய வீட்டில் இருந்தவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x