

வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கவுள்ளது.
'அடங்காதே', '4ஜி', 'சர்வ தாளமயம்', இயக்குநர்கள் சசி மற்றும் ரவி அரசு ஆகியவர்களின் படம் என கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அதனைத் தொடர்ந்து ஸ்ரீக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் இணைப்பில் உருவாகிவரும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 'வேலையில்லா பட்டதாரி 2', தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படம் என தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கிடைத்திருக்கும் இந்த இடைவெளியை முன்வைத்து, ஜி.வி.பிரகாஷ் நாயகனாக வைத்து கதை ஒன்றை தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். அக்கதை பிடித்துவிடவே இருவரும் இணையும் படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஸ்ரீக்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. மார்ச்சில் தொடங்கி ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை' உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவருடைய இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.