

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தனது ஆதரவை நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கான தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, இதற்காக போராடும் இளைஞர்களை வாழ்த்தியுள்ள சூர்யா, பீட்டா அமைப்பு மக்கள் மன்றத்தில் தோற்றுவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் சூர்யா கூறியதாவது:
"பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக 'ஜல்லிக்கட்டு' மாறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப் பிரச்சினைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராடத் தூண்டிய அனைவருக்கும் நன்றி.
தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு. 'மாடுகளுக்கு எதிரானது' என்று பொய்ப் பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற 'பீட்டா' அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. 'நாட்டு மாடு இனம்' அழிவதற்கு துணைபோகிறவர்கள் 'ஜல்லிகட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன' என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக்கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் உரிமைகளை நிலைநாட்ட போராடுகிற அனனவருக்கும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோக்கிறேன்.
மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகி விடக்கூடாது. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல்கொடுப்போம்".
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.