

'மாயா' இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு 'இறவாக்காலம்' என பெயரிட்டுள்ளார்கள்.
நயன்தாரா, ஆரி உள்ளிட்ட பலர் நடிப்பில், 2015-ம் ஆண்டு வெளியான படம் 'மாயா'. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி வெற்றியடைந்த முதல் படம் இதுவாகும். இப்படத்தைத் தொடர்ந்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
தற்போது எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நாயர் இருவரும் நடிக்க புதிய படமொன்றை இயக்கி வருகிறார் அஸ்வின். முழுக்க காதலை மையப்படுத்தி பயணிக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பெயர் உள்ளிட்டவை ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியானது.
இப்படத்தை 'தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட்' என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கி தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்து வருகிறார். மேலும் 'இறவாக்காலம்' என்று படத்துக்கு தலைப்பிட்டுள்ளார்கள்.
'மாயா' படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யோஹன், இப்புதிய படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.