

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினரின் முழு விவரம் வெளியாகியுள்ளது.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார்.
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
இந்தத் தேர்தலில் நடிகர்கள் வாக்களிக்க வசதியாக, அன்றைய தினம் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கும்படி சினிமாத்துறையின் மற்ற சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது நடிகர் சங்கம்.
இந்நிலையில், விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் யார் யார் போட்டியிடுகின்றனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, ‘தளபதி’ தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி, கோவை சரளா, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், அஜய் ரத்னா, பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமச்சந்திரன், குஷ்பு, லதா, நிதின் சத்யா, ‘பருத்தி வீரன்’ சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த முறை இதே பதவிகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.