பள்ளிப் பாடத்தில் சிவாஜி கணேசன்: தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி

பள்ளிப் பாடத்தில் சிவாஜி கணேசன்: தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி
Updated on
1 min read

பள்ளிப் பாடத்தில் சிவாஜி கணேசனைப் பற்றி சேர்த்துள்ள தமிழக அரசுக்கு, இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

“உலகின் மாபெரும் கலைஞன்; தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு; சிறந்த நடிப்புத்திறன் மூலம் ‘நடிகர் திலகம்’, ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட செவாலியே சிவாஜி கணேசனைப் பற்றி, மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் கள்ளிக்காடு, தான் சந்தித்த அனுபவங்களைத் தொகுத்து ‘சிதம்பர நினைவுகள்’ என்ற நூலாக வெளியிட்டார்.

இந்த நூலில் மாமேதை சிவாஜி கணேசனின் நடிப்புத்திறன், கலையுலக அனுபவங்கள், பெற்ற விருதுகள் எனப் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதை, தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு புதிதாக உருவாக்கியுள்ள பாடத் திட்டத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் சேர்த்துள்ளது.

 சிவாஜி கணேசனுக்குப் புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் தலைமுறை மாணவர்கள் அவருடைய கலைத்திறனை அறிந்து கொள்ளும் விதமாகவும் பாடத்திட்டத்தில் சேர்த்துச் சிறப்பித்த தமிழக அரசுக்கு, திரைத்துறையின் மூத்த கலைஞன் என்ற முறையில், கலையுலகம் சார்பாகவும், என் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in