Published : 10 Jun 2019 04:14 PM
Last Updated : 10 Jun 2019 04:14 PM

கிரேசி அவருக்குப் பொருந்தாத பட்டம்; அவர் ‘நகைச்சுவை ஞானி’ - கமல்ஹாசன் புகழாஞ்சலி

கிரேசி அவருக்குப் பொருந்தாத பட்டம், அவர் நகைச்சுவை ஞானி என கிரேசி மோகனுக்குப் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் கமல்ஹாசன்.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.

‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிரேசி மோகனின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன், அவரது மறைவு குறித்து இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நண்பர் கிரேசி மோகன் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம், அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள், ‘லெளகீகம் பழகிக்கிறேன் பேர்வழி’ என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

‘கிரேசி’ என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் ‘நகைச்சுவை ஞானி’. அவரது திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு, மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பதுதான் உண்மை.

பல்வேறு தருணங்களில், சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாகத் தன் பாசத்தை வெளிக்காட்டியவர்.

அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜியுடன் இணைந்து, நண்பர் மோகனின் நெற்றியில் கைவைத்துப் பிரியாவிடை கொடுத்தோம். நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால்தான் நட்பா என்ன?

மோகனின் நகைச்சுவை, அவரது ரசிகர்கள் மூலம் வாழும். அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம், ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள, அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

கமலின் பல படங்களுக்கு வசனகர்த்தாவாக கிரேசி மோகன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x