விக்ரமின் மகாவீர் கர்ணா பணிகளில் சுணக்கம்: பின்னணி என்ன?

விக்ரமின் மகாவீர் கர்ணா பணிகளில் சுணக்கம்: பின்னணி என்ன?
Updated on
1 min read

விக்ரம் நடிப்பில் உருவாகவிருந்த 'மகாவீர் கர்ணா' பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

'கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து 'மகாவீர் கர்ணா' படத்தில் நடிக்க முடிவு செய்தார் விக்ரம். இந்தப் படம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. 300 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல், இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தை நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்காக  திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை எல்லாம் நடத்தியது படக்குழு.

ஆனால், விக்ரமோ தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.

'மகாவீர் கர்ணா' பணிகளில் ஏன் இந்த திடீர் தொய்வு என்று விசாரித்த போது, "அந்தப் படம் கண்டிப்பாக நடைபெறும். ஆனால், சில காலமாகும். ஏனென்றால் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால், எந்தவொரு இடத்திலும் படத்தின் பணிகள் நிறுத்தப்படக் கூடாது என்று விக்ரம் சொல்லியிருக்கிறார்.

படத்தின் பட்ஜெட் பெரியது, உடல் உழைப்பும் அதிகம் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இயக்குநர் விமல் தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பில் என்ன காட்சிகள் எடுக்கிறோம், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு என்ன என்பதை முடிவு செய்து வருகிறார். அனைத்துமே தெளிவாக முடிவானவுடன், விக்ரம் தேதிகள் கொடுத்து படப்பிடிப்பு தொடங்கிவிடும்" என்று தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in