Last Updated : 16 Jun, 2019 12:50 PM

 

Published : 16 Jun 2019 12:50 PM
Last Updated : 16 Jun 2019 12:50 PM

காவல்துறை அதிகாரியாக சண்முக பாண்டியன்: ஜூலையில் படப்பிடிப்பு

சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கவுள்ளது.

'சகாப்தம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அதனைத் தொடர்ந்து 'மதுர வீரன்' படத்தில் நடித்தார். இரண்டு படங்களுக்குமே வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பெரிதாக சோபிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டுக்குச் சென்று நடிப்புப் பயிற்சி எல்லாம் முடித்து திரும்பியுள்ளார் சண்முக பாண்டியன். விஜயகாந்துடன் நடித்து வந்த 'தமிழன் என்று சொல்' படமும் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் புதிய படமொன்றில் நாயகனாக நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார் சண்முக பாண்டியன்.

'விஸ்வாசம்' இயக்குநர் சிவாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்கவுள்ளார். நாயகியாக ரோனிகா சிங், வம்சி கிருஷ்ணா, அர்ச்சனா, முனீஸ்காந்த், அழகம் பெருமாள் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். எடிட்டராக ரூபன் பணிபுரியவுள்ளார். பூஜையுடன் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தின் தலைப்பை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் போலீஸ் படங்கள் வரிசையில் எப்படி விஜயகாந்த் படங்கள் இடம்பெற்றுள்ளதோ, அந்த வரிசையில் இந்தப் படமும் இருக்கும் என்று இயக்குநர் பூபாலன் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கி, ஒட்டுமொத்த படத்தையும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதியிலேயே படமாக்க முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x