

எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கின்றன. அதை காதல் சொட்ட, கண்ணீர் மல்க பார்த்து ரசித்திருக்கிறோம். ரசித்துச் சிலிர்த்திருக்கிறோம். அந்தக் காலத்தில் காதல் படம் என்றாலே ‘தேவதாஸ்’ எதிரே வந்து நிற்பான். கல் நெஞ்சம் கொண்டவர்களும், காதலிக்காதவர்களும் கூட ‘தேவதாஸ்’ சோகத்தில் கனத்துப் போய்விடுவோம். அதன் பின்னர், துள்ளத்துடிக்கிற காதலாக இல்லாமல், ஆழமான, நிதானமான, பக்குவப்பட்ட காதலையும் அந்தக் காதலுக்குள் இருக்கிற சிடுக்குகளையும் சிணுங்கல்களையும் சொன்னவிதத்தில், காதல் படம் என்றாலே... நம் கண்ணுக்கு முன்னே வந்து நின்றது... அந்த பிரமாண்டமான, அழகான, அருமையான ‘வசந்தமாளிகை’.
அழகாபுரி ஜமீன். அதில் இளைய மகன் ஆனந்த்... சிவாஜி. ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் மாதுவும் என்பதுதான் அவரின் வாழ்க்கை. வாழ்க்கையை, அதன் போக்கில் விட்டிருப்பார். விமானப் பணிப்பெண் லதா... வாணிஸ்ரீ. சிவாஜியும் வாணிஸ்ரீயும் விமானத்தில்தான் சந்தித்திருப்பார்கள்.
அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி என்றிருக்கிற பெரிய குடும்பத்தில், வாணிஸ்ரீயின் சம்பளம்தான் பலம். ஆனால் விமான வேலை என்று வீடு சொல்லுவதால், வேறு வேலைக்கு முயற்சி செய்வார். அங்கே, அவரைக் கற்பழிக்க முயலுவார் ராமதாஸ். பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் சிவாஜி, வாணிஸ்ரீயைக் காப்பாற்றுவார். தன்னுடைய காரியதரிசியாகவும் வேலைக்குச் சேர்த்துக்கொள்வார்.
தன்மானமும் சுயகெளரவமும் கொண்டிருக்கும் வாணிஸ்ரீக்கு அந்த அரண்மனையில் ஏகத்துக்கும் இடைஞ்சல். ஆனால் அப்போதெல்லாம் வேலைக்கார வி.எஸ்.ராகவன் தடுத்துவிடுவார். வேலையிலேயே இருக்கச் சொல்லுவார். சிவாஜிக்கு அம்மா உட்பட எவருமே பாசம் காட்டுவதில்லை. ஒருகட்டத்தில், குடித்துக்கொண்டே இருக்கிற சிவாஜிக்கு, வீட்டிலேயே அவமானம். ’இனி குடிக்கக்கூடாது’ என்று தடுக்க, பாட்டில்களை உடைக்க, பாட்டிலை எடுத்து வாணிஸ்ரீயின் மீது சிவாஜி வீச, வழிகிற ரத்தத்தைப் பிடித்து, ‘இதைக் குடிங்க. நல்ல போதையா இருக்கும்’ என்று சொல்ல... துக்கித்துவிக்கித்துப் போவார் சிவாஜி. அப்போது ஓர் ப்ளாஷ்பேக்.
அம்மாவிடம் ஒட்டாமல், ஆயாவிடம் ஒட்டுதலாக இருக்கும் சிவாஜி... சின்னப்பையனாக இருக்கும்போது, தவறாகப் புரிந்துகொண்டு, சுட்டுக்கொல்லப்படுவார். அந்த ரத்தம், ஆயாம்மா இல்லாத தனிமை, அப்பா குடித்துக்கொண்டே இருக்கும் வெறுமை, இதையெல்லாம் பார்த்து குடியில் மூழ்கத் தொடங்கினேன் என்று சொல்லும் சிவாஜி, ‘இனி, குடிக்கமாட்டேன்’ என சத்தியம் செய்வார்.
பிறகு மெல்ல மெல்ல இருவருக்கும் காதல் பூக்கும். தன் காதலிக்காக, மிகப்பெரிய வசந்தமாளிகை எழுப்புவார். காதலையும் சொல்லுவார். இந்தச் சமயத்தில் வாணிஸ்ரீக்கு திருட்டுப்பட்டம் கட்டி, அவரை அங்கிருந்து துரத்துவார்கள். உண்மையெல்லாம் தெரிந்து, நீ திருடியில்லை என்று நீருபணம் செய்துவிட்டேன் என்று சிவாஜி கெஞ்சுவார். ஆனால் தன்மானம்... மன்னிக்காது. சுயகெளரவம்... மனமிரங்காது.
ஒருகட்டத்தில், சிவாஜிக்கு உடல்நலமில்லாமல் போகும். ‘தடக்கென்று குடியை நிறுத்துவதும் தப்பு. தினமும் மருந்து போல் பயன்படுத்துங்கள்’ என மருத்துவர் சொல்ல, சிவாஜி இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன்’ என்று சொல்ல, இதைத் தெரிந்துக்கொண்டு வாணிஸ்ரீ வந்து, விஸ்கியைக் கொடுக்க, குடிக்க மறுப்பார். உடல்நலம் இன்னும் சீர்கெடும். ’இவர் நல்லா இருக்கணும்னா, நாம கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று வீடு பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள்ள வாணிஸ்ரீ சம்மதிப்பார். மனம் நொந்து போன சிவாஜி, வாணிஸ்ரீயை ஒருமுறை பார்ப்பார். வீட்டுக்கு வருவார். விஷம் அருந்துவார். அங்கே கல்யாணம் தடைப்படும். வாணிஸ்ரீ சிவாஜியைக் காண ஓடோடி வருவார். மருத்துவத்தாலும் காதலாலும் பிழைத்த சிவாஜி, வாணிஸ்ரீயுடன் ‘வசந்தமாளிகை’யில் இல்லறத்தைத் தொடங்குவார் என்று படம் முடிய... சோகமும் ஆறுதலும் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள் ரசிகர்கள்.
சிவாஜி, வாணிஸ்ரீ, பாலாஜி, நாகேஷ், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், பண்டரிபாய், சுகுமாரி, வி.எஸ்.ராகவன் என பலரும் நடித்திருந்த ‘வசந்தமாளிகை’ படத்தை பிரமாண்டத் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு தயாரித்திருந்தார். இயக்குநர் பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார். தெலுங்கு ரீமேக் படமான இந்தப் படத்துக்கு, பாலமுருகன் வசனம். கே.வி.மகாதேவன் இசை. அத்தனைப் பாடல்களும் தேன். பாட்டெல்லாம் கண்ணதாசன்.
1972ம் ஆண்டு, செப்டம்பார் மாதம் 26ம் தேதி, ரிலீசான ‘வசந்த மாளிகை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 100 நாள், 150 நாள், 200 நாள்... என வசூலில் சாதனை செய்தது.
பணக்கார, ஏழை காதல்தான். அங்கே வில்லனாக, பிரச்சினையாக இருப்பதும் இதுதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, சுயகெளரவமும் தன்மானமும் காதலுக்கு முட்டுக்கட்டையாக, தடையாக இருப்பதைச் சொன்னதில் வித்தியாசம் பெறுகிறது ‘வசந்தமாளிகை’.
‘வேணாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. விருப்பம்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது’.
‘இதைத்தான் அவங்க பாசம்னு சொல்றாங்க. நீ மோசம்னு சொல்றே’.
‘உங்க அக்கா அகம்பாவம் பிடிச்சவ. வரமாட்டா. ஆனா உங்க அக்காகிட்ட பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்’.
‘இது இறந்து போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடு இருக்கும் காதலிக்காக கட்டப்பட்ட வசந்தமாளிகை’... இப்படி படம் நெடுக, வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டே போகும். வாணிஸ்ரீ பேசும் வசனங்களும் அப்படித்தான். அந்தக் காலத்தில் வாணிஸ்ரீக்காக நான்கைந்து தடவை படம் பார்த்தவர்கள் உண்டு. வாணிஸ்ரீ புடவைக்கட்டிலும் அவரின் கொண்டை ஸ்டைலிலும் ஈர்க்கப்பட்டு பெண்களே திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். நாகேஷ், ரமாபிரபா, வி.கே.ஆர் காமெடி கலகலக்கவைக்கும். இந்தப் படத்தில் வில்லன்களே இல்லை. அண்ணன், அம்மா வில்லத்தனம் செய்வார்கள். ஒருகட்டத்தில், தன்மானமே வில்லனாக விஸ்வரூபமெடுத்து நிற்கும்.
சிவாஜியின் முக்கியமான படங்களில் ஒன்று இது. வாணிஸ்ரீக்கும்தான். ‘ஓ மானிட ஜாதியே’, ‘ஏன் ஏன் ஏன்...’, ‘குடிமகனே பெருங்குடிமகனே...’, ’கலைமகள் கைப்பொருளே...’, ‘மயக்கமென்ன..’, ‘இரண்டு மனம் வேண்டும்’, யாருக்காக இது யாருக்காக’ என்று எல்லாப் பாட்டுமே செம ஹிட்டு.
72ம் ஆண்டு வெளியான படம். 47 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் மறக்கமுடியாத படங்களின் பட்டியலில் தனியிடம் கொடுத்து, கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
‘வசந்தமாளிகை’ உறுதியான அஸ்திவாரம் கொண்ட கோட்டை. காதல் கோட்டை. இன்னும் நூறு வருடங்களானாலும் சிவாஜியும் வாணிஸ்ரீயும் பேசப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ‘யாருக்காக’ ‘இரண்டுமனம் வேண்டும்’ என்றெல்லாம் பாடிக்கொண்டே இருப்பார்கள்.