‘‘ரஜினியின் ‘பாட்ஷா’ நான் டைரக்ட் பண்ணவேண்டிய படம்’’ - மனம் திறக்கும் மனோபாலா

‘‘ரஜினியின் ‘பாட்ஷா’ நான் டைரக்ட் பண்ணவேண்டிய படம்’’ - மனம் திறக்கும் மனோபாலா
Updated on
1 min read

‘‘ரஜினியின் ‘பாட்ஷா’ நான் பண்ணவேண்டிய படம். திடீரென அப்படியே மாறிப்போனது’’ என்று இயக்குநர் மனோபாலா மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான மனோபாலா, தனியார் இணையதளச் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

என் வாழ்க்கையில் இயக்குநர் பாரதிராஜா எனக்குக் கடவுள். கமல்ஹாசன் சரணாலயம். ரஜினிகாந்தைப் பொறுத்தவரை நல்லமனிதர். பாரதிராஜா திரையுலகிற்கு வந்ததில் இருந்து பார்த்தால், வரிசையாக அவரிடம் இருந்து வந்தவர்கள்தான் பெரிய இயக்குநர்களாக வலம் வந்திருக்கிறார்கள். அவரிடம் இருந்து பாக்யராஜ் வந்தார். நான் வந்தேன். மணிவண்ணன் வந்தார். கே.ரங்கராஜ் வந்தார். இப்படி எண்பதுகளில் நாங்கள்தான் வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து வந்தோம். இதில் ஆர்.சுந்தர்ராஜனும் சேர்ந்திருந்தார். அதேபோல எஸ்.பி.முத்துராமன் தனித்து வெற்றி பெற்றுக்கொண்டிருந்தார்.

அதேபோல ஒரேயொரு மோகன். ஆனால் நான், மணிவண்ணன், கே.ரங்கராஜ், ஆர்.சுந்தர்ராஜன் எல்லாரும் இருபது நாள் என கால்ஷீட்டுக்குள் ஆளுக்கொரு படம் பண்ணுவோம்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு ரஜினி ஒருமுறை, ‘இங்கே நீங்கதான் எல்லாமேவா? வேற யாரும் இங்கே ஜெயிக்க முடியாதா? வரிசையா உங்க ஆளுங்களே ஜெயிச்சிட்டிருக்காங்களே. பொறாமையா இருக்கு’ என்று சொன்னார். அந்த அளவுக்கு பாரதிராஜாவிடம் இருந்து வந்த இயக்குநர்கள், ஜெயித்துக்கொண்டே இருந்தோம்.

சத்யா மூவிஸ் தயாரிப்பில், ரஜினியை வைத்து, நான் ‘ஊர்க்காவலன்’ படத்தை இயக்கினேன். அதன் பிறகு, அதே சத்யா மூவிஸ் நிறுவனம் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கச் சொல்லி என்னிடம் சொன்னது. நானும் அவர்கள் சொன்ன கதையை நகாசுபடுத்தினேன். அது அமிதாப் நடித்த இந்திப்படம்.

ஆனால் திடீரென என்னவோ நடந்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. நான் நேராக ரஜினியின் வீட்டுக்கே சென்று, ‘ஏன் என்னாச்சு?’ என்று கேட்டேன்.

‘ஒண்ணும் கேக்காதீங்க. இந்தப் படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கட்டும். அடுத்தாப்ல நாம திரும்பவும் ஒண்ணு சேருவோம். இது உறுதி’ என்று சொன்னார். நான் இயக்குவதாக இருந்து தடாலடியாக சுரேஷ் கிருஷ்ணா என மாறிய படம்தான் ‘பாட்ஷா’.

ஆனால் அதன் பிறகு, ரஜினியை வைத்து நான் இயக்கவே இல்லை. ‘ஊர்க்காவலன்’ படத்துடன் சரி. அதையடுத்து நானும் ரஜினியிடம் இதுபற்றிக் கேட்டுக்கொள்ளவ்வில்லை.

இவ்வாறு மனோபாலா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in