

நம் தமிழ் உணர்வின் மிகப்பெரிய அங்கம் அவர் என கிரேசி மோகனுக்கு நடிகர் சித்தார்த் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.
கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.
‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“கிரேசி மோகன் மறைந்துவிட்டார். சினிமாவுக்கு, நாடகத்துக்கு, சிரிப்புக்கு, வாழ்க்கைக்கு ஒரு வருத்தமான நாள். அவரைப்போல இன்னொருவர் என்றும் வரமுடியாது. அவரது ஆன்மாவுக்கு என் பிரார்த்தனைகள். குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நம் தமிழ் உணர்வின் மிகப்பெரிய அங்கம் அவர்” எனப் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் சித்தார்த்.