‘நீட்’ தற்கொலைகளுக்கு காரணம் யார்? - இயக்குநர் பா.இரஞ்சித் ட்வீட்

‘நீட்’ தற்கொலைகளுக்கு காரணம் யார்? - இயக்குநர் பா.இரஞ்சித் ட்வீட்
Updated on
1 min read

‘நீட்’ தேர்வு முடிவால் நிகழ்ந்த தற்கொலைகளுக்கு காரணம் யார்? என இயக்குநர் பா.இரஞ்சித் ட்வீட் செய்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள், நேற்று (மே 5) வெளியிடப்பட்டன. இதில், 59 ஆயிரத்து 785 தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கே.ஸ்ருதி, அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்தார்.

அதேசமயம், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரிதுஸ்ரீ மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா இருவரும் போதிய மதிப்பெண்கள் பெறாததால் தற்கொலை செய்து கொண்டனர்.

முன்னதாக, ‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அனிதா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது இந்த இரு மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ‘நீட்’ குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

“நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இப்போது ரிதுஸ்ரீ, வைஷ்யா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு, நீட் என்ற கொள்கையை சட்டமாகக் கொண்டிருக்கும் மத்திய அரசு, அதைத் தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம்... இவர்கள்தான் இதை நிகழ்த்தியவர்கள்!” எனத் தெரிவித்துள்ளார் பா.இரஞ்சித்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in