மகத்தான மனிதர்கள்: ஜி.வி.பிரகாஷின் புதிய முயற்சி

மகத்தான மனிதர்கள்: ஜி.வி.பிரகாஷின் புதிய முயற்சி
Updated on
1 min read

'மகத்தான மனிதர்கள்' என்ற பெயரில் சாதனையாளர்களைப் பேட்டியெடுத்து தன் யூ டியூப் பக்கத்தில் வெளியிடவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்

முன்னணி நடிகர், இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது தனது யூ டியூப் பக்கத்தில் புதிதாக பேட்டியாளராகவும் களம் காணவுள்ளார். 'மகத்தான மனிதர்கள்' என்ற பெயரில், வெளியே தெரியாமல் இருக்கும் சாதனையாளர்களைப் பேட்டியெடுத்து வெளியிடவுள்ளார்.

இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷிடம் கேட்ட போது, “கஜா புயல் சமயத்தில் தோன்றிய எண்ணமிது. பல்வேறு மனிதர்கள் சிறந்த சேவை செய்துவிட்டு வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பேட்டியெடுத்து வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.

அதில் முதல் ஆளாக, ஜவ்வாதுமலையில் உள்ள மகாலட்சுமி என்ற ஆசிரியை பல்வேறு மலைவாழ் மாணவர்களை தனிப்பட்ட முயற்சி எடுத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பேட்டியெடுத்துள்ளேன். இதனை என் யூ டியூப் பக்கத்திலேயே வெளியிடவுள்ளேன். தனியார் தொலைக்காட்சியில் பண்ணலாம் என்றால், அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கும்.

மேலும், இந்த விஷயம் பேசக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் இருக்கும். என் யூ டியூப் பக்கம் என்பதால் எவ்விதமான தடங்கலும் இருக்காது.  ஒவ்வொரு மாதமும் ஒருவர் என்று பேட்டியெடுக்கவுள்ளேன். அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து வாரந்தோறும் பண்ணும் எண்ணமும் இருக்கிறது. எவ்விதமான லாப நோக்கமும் இல்லாமல் இருக்கும்” என்று தெரிவித்தார்.

இவருடைய நடிப்பில் ’வாட்ச்மேன்’ படத்துக்கு அடுத்ததாக சசி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிவப்பு மஞ்சள் பச்சை' வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'ஜெயில்', ‘ஐங்கரன்’, ‘100% காதல்’, ‘காதலை தேடி நித்யா-நந்தா’, ‘காதலிக்க யாருமில்லை’, '4ஜி’ உள்ளிட்ட படங்கள் வெளிவரவுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in