Published : 30 May 2019 01:09 PM
Last Updated : 30 May 2019 01:09 PM

ஆண்டவன் கொடுத்த பரிசு நேசமணி கதாபாத்திரம்: வடிவேலு

வடிவேலின் ‘நேசமணி’ கதாபாத்திரம் உலக அளவில் ட்ரெண்டானதைத் தொடர்ந்து, அந்தக் கதாபாத்திரம் ஆண்டவன் தனக்குக் கொடுத்த பரிசு என அவர் தெரிவித்துள்ளார்.

சித்திக் இயக்கத்தில், விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ஸ்ரீமன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ப்ரண்ட்ஸ்’. 2001-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள், மிகவும் வரவேற்பைப் பெற்றவை. இதில் வடிவேலுவின் பெயர், நேசமணி.

அவர், ஜமீன் வீட்டுக்கு பெயின்ட் அடிக்கும் ஒப்பந்தத்தைக் கைப்பற்றி, அங்கு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட தன் அணியினரை அழைத்துச் செல்வார். அப்போது வடிவேலுவுக்கும், ரமேஷ் கண்ணாவுக்கும் ஆணி பிடுங்குவது தொடர்பாக ஒரு காமெடிக் காட்சி வரும்.

ஆணி பிடுங்கும் சமயத்தில், ரமேஷ் கண்ணாவின் கைகளிலிருந்து சுத்தியல் நழுவி, கீழே நின்று கொண்டிருக்கும் வடிவேலு தலையில் விழும். அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் என காமெடியாக நகர்த்தியிருப்பார் இயக்குநர் சித்திக்.

இந்நிலையில், ‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ‘இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்?’ எனப் பதிவிட்டது. மே 27-ம் தேதி இப்பதிவு வெளியானதும், பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அதில், விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதற்குப் பெயர் சுத்தியல். எதன்மீது இதைக்கொண்டு அடித்தாலும் ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் ஒப்பந்தக்காரர் நேசமணி தலைமீது, அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார். இதனால் நேசமணி தலை உடைந்துவிட்டது. பாவம்" என்று கருத்திட்டார்.

உடனே, “அவர் எப்படியிருக்கிறார்?” என மற்றொருவர் கேட்க, “அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி கொடுத்துவிட்டனர்” என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து, ‘அவருக்காகப் பிரார்த்திப்போம்’ என்று ஃபேஸ்புக் பக்கத்தில் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இந்த ஹேஷ்டேக் பிரபலமாக, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைதளங்களிலும் நேசமணிக்கான பிரார்த்தனைக் கருத்துகள் இடப்பட்டன. இந்த ஹேஷ்டேக், நேற்றிரவு (மே 29) உலக அளவில் ட்ரெண்டாது. இப்போதும் இந்திய அளவில் ட்ரெண்டில் உள்ளது.

இதுகுறித்து வடிவேலிடம் கேட்டபோது, “நேசமணி கதாபாத்திரம் என்பது எனக்கு ஆண்டவன் கொடுத்த பரிசு” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x