என் முடிவில் தவறானது தியா: சாய் பல்லவி ஓப்பன் டாக்

என் முடிவில் தவறானது தியா: சாய் பல்லவி ஓப்பன் டாக்
Updated on
1 min read

என் முடிவில் தவறானது 'தியா' என்று தன் படங்களின் தேர்வு குறித்து சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'என்.ஜி.கே'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சூர்யாவின் தீவிர ரசிகையாக இருந்து, தற்போது அவருக்கே நாயகியாக நடித்திருப்பது குறித்து சாய் பல்லவி கூறுகையில், "சூர்யா மீது சிறு வயதிலிருந்தே ஈர்ப்பு இருந்தது. ஆனால் நான் அவரிடம் சொல்லவில்லை. முதல் முறை அவரைப் பார்த்த போது என் வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. வெறும் காற்று மட்டும் தான் வந்தது" என்று தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.

'கதை அவரைப் பற்றியதாக இருக்க வேண்டும் அல்லது அதில் இருக்கும் தாக்கம் இவரால் ஏற்பட்டதாய் இருக்க வேண்டும், அப்போதுதான் சாய் பல்லவி நடிக்க ஒப்புக்கொள்வார் என்று தனுஷ் சொல்லியிருக்கிறாரே. அப்படியென்றால் ’என்.ஜி.கே’ எப்படி என்று கேள்வி கேட்டபோது, "இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது கற்றுக்கொள்ள நல்ல அனுபவமாக இருக்கும் என்பதால் தான் நடித்தேன். பார்க்கும் ரசிகர்களுக்கு இது இரண்டரை மணி நேரப் படம். சாய் பல்லவிக்கு இது ஒரு வருட தனிப்பட்ட வாழ்க்கை. அதனால் அதற்குப் பலன் இருக்கும் என நம்புகிறேன்.

கதாபாத்திரங்களை ஒப்புக்கொள்ள எனது இந்த விதிமுறையில் தவறான முடிவு என்பது தியா படத்தின் துளசி கதாபாத்திரம் தான். 19 வயதுப் பெண், கருக்கலைப்பு செய்வது பற்றிய படம் அது. அப்போது நான் இன்று இருக்கும் அளவுக்கு அவ்வளவு முதிர்ச்சியடையவில்லை என்று நினைக்கிறேன். நான் திரைக்கதை படித்தபோது என்னைச் சுற்றியே கதை நடக்கிறது என நினைத்தேன். ஆனால், இப்போது அந்தக் கதை வந்திருந்தால் சில விஷயங்களை மாற்றியிருப்பேன்" என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in