‘அயோக்யா’ படத்தின் டிக்கெட் தொகையில் இருந்து விவசாயிகளுக்கு நிதியுதவி

‘அயோக்யா’ படத்தின் டிக்கெட் தொகையில் இருந்து விவசாயிகளுக்கு நிதியுதவி
Updated on
1 min read

‘இரும்புத்திரை’, ‘துப்பறிவாளன்’ படங்களைப் போல, ‘அயோக்யா’ படத்தின் டிக்கெட் தொகையில் இருந்தும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க முடிவெடுத்துள்ளார் விஷால்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற விஷால், ‘என்னுடைய ஒவ்வொரு படத்தின் ஒரு டிக்கெட் தொகையில் இருந்தும் 1 ரூபாய் விவசாயிகள் நலனுக்காக வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

அதன்படி, ‘இரும்புத்திரை’ மற்றும் ‘துப்பறிவாளன்’ படங்களின் டிக்கெட் தொகையில் இருந்து சேர்த்த 11 லட்ச ரூபாயை, கடந்த வருடம் (2018) நடைபெற்ற ‘சண்டக்கோழி 2’ இசை வெளியீட்டு விழாவில் வழங்கினார். 30க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகள் இந்த விழாவில் கலந்துகொண்டு, நேரடியாக நிதியுதவியைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், இதே ஐடியாவை ‘அயோக்யா’ படம் மூலமாகவும் செயல்படுத்த உள்ளார் விஷால். அதன்படி, ஒவ்வொரு ‘அயோக்யா’ டிக்கெட் தொகையில் இருந்தும் 1 ரூபாய் விவசாயிகளுக்கென வழங்கப்பட இருக்கிறது.

வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘அயோக்யா’ படத்தில், விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, ஆனந்த் ராஜ், வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in