Published : 30 May 2019 04:10 PM
Last Updated : 30 May 2019 04:10 PM

குஷ்புதான் முட்டாள் கருத்துகளை ரசிப்பார்: ‘ப்ரே ஃபார் நேசமணி’ குறித்து காயத்ரி ரகுராம் காட்டம்

குஷ்பு மட்டும்தான் உங்கள் முட்டாள் கருத்துகளை ரசிப்பார். முன்னேறிச் செல்லுங்கள். அவர் நிச்சயமாக இதை ரீட்வீட் செய்வார் என்று ‘ப்ரே ஃபார் நேசமணி’ குறித்து காயத்ரி ரகுராம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ‘இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்?’ எனப் பதிவிட்டது.

மே 27-ம் தேதி இப்பதிவு வெளியானதும், பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அதில், விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதற்குப் பெயர் சுத்தியல். எதன்மீது இதைக்கொண்டு அடித்தாலும் ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் ஒப்பந்தக்காரர் நேசமணி தலை மீது, அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார். இதனால் நேசமணி தலை உடைந்துவிட்டது. பாவம்” என்று கருத்திட்டார்.

உடனே, “அவர் எப்படியிருக்கிறார்?” என மற்றொருவர் கேட்க, “அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்துவிட்டனர்” என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ‘அவருக்காகப் பிரார்த்திப்போம்’ என்று ஃபேஸ்புக் பக்கத்தில் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இந்த ஹேஷ்டேக் பிரபலமாக, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைதளங்களிலும் நேசமணிக்கான பிரார்த்தனைக் கருத்துகள் இடப்பட்டன.

இந்நிலையில், இந்த ட்ரெண்ட் குறித்து தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். ட்விட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“மக்கள் சிலர் பித்து பிடித்ததுபோல் செயல்படுகின்றனர். ஒரு சிறப்பான காமெடிக் காட்சியை அற்பமான பகடியாக்கி, அதை வைத்து மீம்ஸ், ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளனர். இவையெல்லாம் தேவையற்றது. #Pray_For_Nesamani என்ற இந்த ட்ரெண்டிங்கும் தேவையற்றது. நாம், நமது நக்கல் காரணமாக முட்டாள்களாகக் காட்சியளிக்கிறோம். நம்முடைய வெட்டித்தனத்தால் முட்டாளாகப் போகிறோம்.

இதை நீங்கள் பிரதமர் மோடிக்கு எதிராகச் செய்வதாக நினைத்தீர்கள் என்றால், அதுவொரு குரலற்ற யோசனை. இது, நாம் முட்டாள்கள் என்று தரம் தாழ்த்தும். உலக மக்கள் நமக்கு மூளை இல்லை என நினைப்பார்கள். இந்தக் காட்சியைப் பகிர்ந்த பலருக்கும், அதன் பகடியே புரியவில்லை. இருந்தாலும், ஏன் இதைப் பகிர்கிறார்கள் என்று தெரியவில்லை. போலிப் போராளிகளுக்காக வருந்துகிறேன். நீங்கள் முட்டாள்கள் போல் நடக்கலாம். ஆனால், எல்லாத் தமிழர்களும் முட்டாள்கள் அல்ல.

வெற்றுக் கருத்துகள், ஹேஷ்டேக்குகள், மீம்கள் ஆகியவற்றுடன், தோற்பதற்காகவே காங்கிரஸ் ஏகப்பட்ட பணத்தைச் செலவுசெய்தது போல் தெரிகிறது.  இம்முறை இந்தியா நெடுகிலும் காங்கிரஸ் இதே காரணத்துக்காகத்தான் தோற்றுள்ளது. குஷ்பு மட்டும்தான் உங்கள் முட்டாள் கருத்துகளை ரசிப்பார். முன்னேறிச் செல்லுங்கள். அவர் நிச்சயமாக இதை ரீட்வீட் செய்வார். எனக்கு உங்கள் விமர்சனங்களால் எந்தக் கவலையும் இல்லை''.

இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x