

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மே 7 அன்று விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் தலைமையிலான நிர்வாகிகள் நிர்வகித்து வருகிறார்கள் இவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. தேர்தல் தேதியை தீர்மானிக்கவும் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் வருகிற மே 1-ம் தேதி பொதுக்குழு கூட இருக்கிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை தமிழக அரசு திடீரென நியமித்தது. தமிழக அரசின் வணிகவரித் துறையும், பதிவுத் துறையும் இணைந்து சென்னை மத்திய பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தனி அதிகாரியாக நியமித்தது.
இது திரைப்பட தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தற்போது தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதம் என்றும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விஷால் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு வழக்கை இன்று ஒத்திவைத்தார். இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், “ஏற்கெனவே சங்கத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளே நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென தமிழக அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது அதிகாரத்தை மீறிய செயல், இதுவரை தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் மட்டுமே புகார் அளித்துள்ளார்.
அந்தப்புகாரை பதிவு செய்த தமிழக அரசு இதன்மீது உரிய விசாரணை நடத்தாமல், ராதாகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரை மட்டுமே வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது தவறு.
நிதி முறைகேடு குறித்து அளிக்கப்பட்ட புகாருக்கு தகுந்த விளக்கம் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தனர். அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அனைத்து பதில்களும் தங்களிடம் உள்ளது. ஆகையால் தனி அதிகாரி நியமனம் தவறு” என்று தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், “தயாரிப்பாளர் சங்கத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு, புகார்கள் வந்துக்கொண்டிருக்கிறது, நிதி முறைகேடு குறித்தும் புகார்கள் அதிகம் வந்ததால் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் பிரச்சினைகளுக்கு முடிவு வந்துவிட்டால் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ரவிச் சந்திரபாபு வழக்கு குறித்து தமிழக அரசு தரப்பு வரும் 7-ம் தேதி தன்னுடைய பதிலை அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை மே. 2-ம் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.