Last Updated : 09 Apr, 2019 07:59 PM

 

Published : 09 Apr 2019 07:59 PM
Last Updated : 09 Apr 2019 07:59 PM

மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது; கொலை குற்றமா பண்ணிவிட்டேன்: ராதாரவி பேச்சு

மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது; கொலை குற்றமா பண்ணிவிட்டேன் என்று குறும்பட விழா ஒன்றில் நடிகர் ராதாரவி பேசினார்.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள  'கொலையுதிர் காலம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள்.

மேலும், இப்பேச்சுக்காக திமுக கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார் ராதாரவி. நயன்தாராவும் அறிக்கையின் மூலமாக ராதாரவியை கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் 'எனக்கு இன்னொரு முகம் இருக்கு'குறும்படம் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராதாரவி பேசியதாவது:

சிங்கம் எப்போதுமே கர்ஜிக்கும். இயக்குநர் பேரரசு பேசுவதை ரசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால், இடையே பயந்துவிடாதீர்கள் என்றார். பயம் என்பது தான் எங்களுடைய குடும்பத்திலேயே கிடையாது. எதற்கு பயப்பட வேண்டும்?. சிலர் நடிப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி நிறுத்த முடியும்.

நான் சந்தித்தது ஒரு பிரச்சினையே இல்லை.இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதே கிடையாது. ஏனென்றால் இதெல்லாம் தற்காலிக பிரச்சினை. இவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு இது என்ன ஐ.நா சபை பிரச்சினையா?. நம்ம பேசினதில் உண்மை இருக்கா இல்லையா. அவ்வளவு தான். உண்மை என்றவன் ஏத்துக்குட்டு போ, இல்லை என்றவன் விட்டுவிடு.

சந்தையில் பாகற்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் விற்பார்கள். பாகற்காய் கசக்கும் ஆனால் உடம்புக்கு நல்லது. அதை விற்காதே என்று சொல்வதற்கு உரிமை கிடையாது. நீ வாங்காமல் போ அவ்வளவு தான். நான் நிறையப் பேசுவதற்கு காரணம், நிறைய படிப்பேன்” என்று பேசினார்.

மேலும் குறும்படம் தொடர்பாக பேசிவிட்டு “நான் பேசும் போது இவ்வளவு பேர் கைதட்டி ஆதரிக்கிறீர்கள். கோபமாக இருந்தால் யாராவது பேசியிருக்கலாம் அல்லவா?. இது தான் அன்றைக்கு 'கொலையுதிர் காலம்' சந்திப்பிலும் நடந்தது. அதை தவறு என்று சொல்கிறார்கள். எப்போதுமே உண்மையைச் சொன்னால் ஆதரிப்பார்கள்.

'கொலையுதிர் காலம்' பிரச்சினையின் போதே, யாராவது மனவருத்தம் பட்டிருந்தால், அவர்களிடம் மனவருத்தம்படுகிறேன் என்று சொல்லுங்கள் எனச் சொன்னேன். மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது. எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், கொலை குற்றமா பண்ணிவிட்டேன்” என்று பேசினார் ராதாரவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x