தொடரும் ரசிகர்கள் தொந்தரவு: முடிவை மாற்றும் தளபதி 63 படக்குழு

தொடரும் ரசிகர்கள் தொந்தரவு: முடிவை மாற்றும் தளபதி 63 படக்குழு
Updated on
1 min read

தொடர்ச்சியாக ரசிகர்கள் தொந்தரவு அதிகமாகி வருவதால், இனிமேல் அரங்குகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்துவது என 'தளபதி 63' படக்குழு முடிவு செய்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்றபோது, சென்னையில் நடத்தினால் மட்டுமே இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் கேட்டுக் கொண்டதால், இங்கேயே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

தற்போது நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த போது, விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவு கூடிவிட்டார்கள். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

தொடர்ச்சியாக ரசிகர்கள் தொந்தரவு இருந்து வருவதால், தினமும் திட்டமிட்ட காட்சிகளை அதற்கான கால அளவுக்குள் படமாக்க முடியவில்லை. இதனால், 'தளபதி 63' படக்குழு இனிமேல் அரங்குகளுக்குள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிவு எடுத்துள்ளது.

தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் விஜய் விரைவில் சென்னை திரும்பவுள்ளார். அதனைத் தொடர்ந்து 'தளபதி 63' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இது முழுமையாக அரங்குகளில் மட்டுமே நடைபெறவுள்ளது. இதற்காக பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அரங்குகளில் அமைத்து படப்பிடிப்பு நடைபெறும் போது, ஒரு கட்டத்துக்கு மேல் ரசிகர்களைப் பாதுகாவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதனால், எவ்வித தொந்தரவும் இன்றி படப்பிடிப்பு நடத்தலாம் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது படக்குழு. இதற்காக பல கோடியில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in