

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா - ரேவதி நடித்து வந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் 35 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது.
'36 வயதினிலே', 'மகளிர் மட்டும்' , 'நாச்சியார்', 'செக்கச்சிவந்த வானம்', 'காற்றின் மொழி' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜோதிகா, ' குலேபகாவலி' கல்யாண் இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
இதன் படப்பிடிப்பு பூஜையுடன் பிப்.10-ம் தேதி தொடங்கப்பட்டது. சரியாக திட்டமிட்டு 35 நாட்கள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. இறுதிநாள் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் சூர்யா கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலர் ஜோதிகாவுடன் நடித்துள்ளனர். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, எடிட்டிர் விஜய் படத்தை தொகுக்கிறார்.
2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.