Last Updated : 28 Apr, 2019 12:24 PM

 

Published : 28 Apr 2019 12:24 PM
Last Updated : 28 Apr 2019 12:24 PM

‘என் பார்முலாவே இல்லையேனு எம்ஜிஆர் சொன்னார்’’ - ஏவிஎம்.சரவணன் ’அன்பே வா’ ஃப்ளாஷ்பேக்

’அன்பே வா’ படத்து கதையைக் கேட்டுட்டு, ‘என் பார்முலாவே இல்லையேன்னு எம்ஜிஆர் சொன்னார். ஏவிஎம் எந்த ஹீரோவுக்காகவும் கதை பண்ணினதே இல்லை. எம்ஜிஆர் நடிச்ச ‘அன்பே வா’ படம்தான், ஹீரோவுக்காக ஏவிஎம் கதை பண்ணின முதல் படம்’’ என்று ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.

ஏவிஎம்.சரவணன் தனியார் இணையதள சேனலுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

அப்பா (ஏவி.மெய்யப்பச் செட்டியார்) எப்போதுமே முதல்ல கதையைத்தான் ரெடி பண்ணுவார். கதைக்கான டிஸ்கஷன் போயிக்கிட்டே இருக்கும். கதைல எந்தக் குழப்பமும் இல்ல, எல்லாருக்கும் திருப்தியா வந்திருக்குன்னு முடிவான பிறகுதான் ‘சரி, யார்யாரையெல்லாம் நடிக்கவைக்கலாம்’னு பேச்சு வரும். அப்படித்தான் ரொம்ப வருஷமாவே படம் பண்ணிட்டிருந்தோம்.

ஒருநாள் அப்பா கூப்பிட்டார். ‘என்னப்பா, டிஸ்டிரிபியூட்டர்கள் எல்லாரும் ஏவிஎம் இன்னும் எம்ஜிஆரை வைச்சுப் படமே பண்ணலியேனு கேக்கறாங்க’ன்னு சொன்னார். ‘எங்களுக்கும் அந்த எண்ணம்தான். ஆனா உங்ககிட்ட சொல்றதுக்கு தயக்கமா இருந்துச்சு. டைரக்டர் திருலோகசந்தர் (ஏ.சி.திருலோகசந்தர்) ஒரு கதைப் பண்ணிவைச்சிருக்கார். கேட்டுட்டுச் சொல்லுங்கப்பா’ன்னு சொன்னேன்.

இதுக்கு நடுவுல, நடிகர் அசோகன், எப்பப் பாத்தாலும் ‘எம்ஜிஆரை வைச்சு ஒரு படம் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அதேபோல எம்ஜிஆர்கிட்ட, ‘ஏவிஎம்க்கு ஒரு படம் பண்ணுங்களேன்’ன்னும் சொல்லிக்கிட்டே இருந்தார் அசோகன்.

அப்பா கதையைக் கேட்டாரு. ‘சரி, சின்னவர்கிட்ட (எம்ஜிஆர்) கதையைச் சொல்லுங்க’ன்னாரு அப்பா. நான், திருலோகசந்தர், ஆரூர்தாஸ் எல்லாரும் போய், கதையைச் சொன்னோம். முழுக்கதையையும் கேட்ட எம்ஜிஆர், ’இது என் படம் இல்ல. என் பார்முலா எதுவுமே இந்தப் படத்துல இல்ல. அம்மா கேரக்டர் இல்ல. தங்கச்சி இல்ல. சண்டைக்காட்சிகள் கிடையாது. இது ஏ.சி.திருலோகசந்தர் படம்’னு சொன்னார். ஆனா நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டார்.

ஆனா, இதுவரைக்கும் எந்தவொரு நடிகருக்காகவும் ஏவிஎம் கதை பண்ணினது இல்ல. கதை பண்ணுவோம்; அதுக்கு யாரு பொருத்தமோ, அவரை ஹீரோவாப் போடுவோம். இத்தனைக்கும் ‘அன்பே வா’ படத்து கதையை எம்ஜிஆருக்காகத்தான் யோசிச்சோம். ‘ஒருவேளை எம்ஜிஆருக்கு கதை பிடிக்கலேன்னா, ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் வைச்சு எடுக்கறதா முடிவு பண்ணிருந்தோம். ஆனா, எம்ஜிஆர் நடிக்க சம்மதிச்சாரு.

ஏவிஎம் தயாரிப்புலயும் சரி, எம்ஜிஆரோட கேரியர்லயும் சரி... ‘அன்பே வா’ திரைப்படம், வித்தியாசமான வெற்றிப்படம்.

இவ்வாறு ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x