

ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படம், மே 9-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் 3,850 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16-ம் தேதி அன்று 'கோச்சடையான்' படத்தினை வெளியிடலாமா என குழப்பம் இருந்த நிலையில், மே 9-ம் தேதியே வெளியிடலாம் என இறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கிறது 'கோச்சடையான்'.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தினை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பிரதியை தயார் செய்ய இயக்குநர் செளந்தர்யா சீனா சென்று முதல் பிரதியை முடித்து திரும்பி இருக்கிறார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, பஞ்சாபி, ஒரியா, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில் உலகம் முழுவதும் 3,850 திரையரங்குகளில் கோச்சடையான் வெளியிடப்படுகிறது. இது, உலகம் முழுவதும் ஜாக்கிசான் படங்களுக்கு கிடைத்த திரையரங்குகளை விட எண்ணிக்கையில் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால், மே 9ம் தேதி வெளியாகும் என்று மீடியா ஒன் ட்விட்டர் தளத்தில் அறிவித்திருக்கிறார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாக இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.