

'தேவராட்டம்' தலைப்புக்கான காரணம் குறித்து, எழுத்தாளரும் நடிகருமான வேல.ராமமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
'கொடிவீரன்' படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தேவராட்டம்'. கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, போஸ் வெங்கட், வினோதினி, வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இச்சந்திப்பில் வேல.ராமமூர்த்தி பேசியதாவது:
எனக்கு நல்ல அடையாளத்தை 'கொம்பன்' படம் மூலமாக ஏற்படுத்தித் தந்த தம்பி முத்தையாவிற்கு நன்றி. அவர் தொடர்ந்து தன் படங்களில் குடும்ப உறவுகளைப் பற்றிப் பதிவு செய்து வருகிறார்.
இந்த ’தேவராட்டம்’ படம் அக்கா தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டது. அக்காவின் பாசம் அம்மாவின் பாசத்திற்கு ஈடானது. இந்தப்படம் இரு பெருங்குடும்பத்தின் கதை. அந்தப் பெருங்குடும்பத்தின் ஆணிவேராக என் கதாபாத்திரம் இருக்கும். என்னுடைய கதைகளுக்கு தமிழில் ஒரு ஹீரோ இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதைத் தீர்க்க வந்தவர் கவுதம் கார்த்தி. அவர் நடிப்பில் எல்லாத் தளங்களிலும் கலக்கி வருகிறார்.
இந்தப்படம் சாதி படம் அல்ல. ஆட்டக்கலைகளை பற்றிய தகவல்களை திரட்டிய போது தேவராட்டம் என்ற ஆட்டத்தைப் பற்றி அறிந்தேன். தேவராட்டம் என்றால் தேவர்கள் ஆடும் ஆட்டமல்ல. இது எல்லாச் சாதிகளும் ஆடும் ஆட்டம்
இவ்வாறு வேல.ராமமூர்த்தி பேசினார்