அஜித்துடன் படம்: சூசகமாக உறுதி செய்த இயக்குநர் வெங்கட் பிரபு

அஜித்துடன் படம்: சூசகமாக உறுதி செய்த இயக்குநர் வெங்கட் பிரபு
Updated on
1 min read

அஜித்துடன் படம் பண்ணவுள்ளதை, சூசகமாக உறுதி செய்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்துப் பேசினார் இயக்குநர் வெங்கட் பிரபு. அப்போதிலிருந்தே, 'மங்காத்தா' படத்துக்குப் பிறகு அஜித் - வெங்கட்பிரபு கூட்டணி இணைகிறது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது. தற்போது 'ஆர்.கே.நகர்' படத்துக்காக அளித்துள்ள பேட்டியில் அஜித் படத்தை சூசகமாக உறுதி செய்துள்ளார் வெங்கட் பிரபு.

அஜித் படம் குறித்த கேள்விக்கு "அப்படம் குறித்துப் பேசுவது இப்போது மிகவும் சீக்கிரம் என நினைக்கிறேன். பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அனைத்தும் முடிவானவுடன், அஜித் சார் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்

'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு, மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் படத்திலேயே நடிக்கவுள்ளார் அஜித். இதனை எச்.வினோத் இயக்குவார் எனத் தெரிகிறது.

 அஜித் அப்படத்தை முடிப்பதற்குள், வெங்கட் பிரபுவும் 'மாநாடு' படத்தை முடித்துவிடுவார். அதனைத் தொடர்ந்து இருவரும் இணையும் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in