

‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு, அனிருத் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. திறமையான பாடகர்களை அடையாளம் கண்டு உலகுக்கு அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட பலர், இன்றைக்கு சினிமாவில் பின்னணிப் பாடகர்களாகவும் இசையமைப்பாளர்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.
16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக சீனியர், 16 வயதுக்குக் குறைந்தவர்கள் ஜூனியர் எனப் பிரித்து இரண்டு விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில், ‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், ரித்திக் டைட்டிலை வென்று, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்றார்.
இந்நிலையில், 16 வயதுக்கும் மேற்பட்டோருக்கான ‘சூப்பர் சிங்கர் 7’, வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 27) தொடங்க இருக்கிறது. பிரபல பின்னணிப் பாடகர்களான உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகிய 4 பேரும் நடுவர்களாக இருந்து இந்த நிகழ்ச்சியை வழிநடத்த உள்ளனர்.
மேலும், சிறப்பு நடுவராக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் கலந்துகொள்ள இருக்கிறார். அத்துடன், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட இருக்கிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.