நடிகை கஸ்தூரி கட்சி தொடங்க வேண்டும்: கே.எஸ்.ரவிகுமார்

நடிகை கஸ்தூரி கட்சி தொடங்க வேண்டும்: கே.எஸ்.ரவிகுமார்
Updated on
1 min read

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால், நடிகை கஸ்தூரி ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

கே.சி.சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. அனந்த் நாக் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சம்யுக்தா மேனன் மற்றும் அஞ்சு குரியன் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். காவியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (மார்ச் 4) நடைபெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய கே.எஸ்.ரவிகுமார், “அமெரிக்காவில் திரைப்பட இயக்குநர்களுக்கான சங்கக் கட்டிடம் பல அடுக்கு மாடிகளில் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். அதேபோல் தற்போது சென்னையில் நடிகர் சங்கக் கட்டிடமும் பல அடுக்கு மாடிகளாக உருவாகியிருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதன் பின்னணியில் உழைத்த கார்த்தியைப் பற்றி எங்களுக்குத் தெரியும். அவரது ராசியான கரங்களால் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றுள்ளது. அதனால் இந்தப் படமும் வெற்றிபெறும்.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பேச்சுகள் அடங்கிய யூ டியூப் சேனலைப் பார்த்து வியந்திருக்கிறேன். ‘படையப்பா’வில் நீலாம்பரி ரசிக்கப்பட்டதற்கு, அந்தப் பெண்ணிடம் உள்ள துணிச்சலே காரணம்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால், நடிகை கஸ்தூரி ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in