

சூர்யா - சுதா கொங்கரா இணையும் படத்துக்கு, ‘உறியடி’ படத்தின் இயக்குநர் விஜய் குமார் வசனம் எழுதியுள்ளார்.
சூர்யா நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘என்ஜிகே’. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கே.வி.ஆனந்த் இயக்கிவரும் இந்தப் படத்தில், ஹீரோயினாக சயிஷா நடித்துள்ளார். பொமன் இரானி, மோகன்லால், ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது அவருடைய 38-வது படமாகும். ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ஜீ.வி.பிரகாஷ்.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘உறியடி’ படத்தின் இயக்குநர் விஜய் குமார் வசனம் எழுதியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
விஜய் குமார் இயக்கி, நடித்து வெளியான ‘உறியடி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.