

இனிமேல் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்த மாட்டேன் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் உண்மை’. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
எல்லோரிடமும் பரவலாகச் சென்றடைந்த இந்த நிகழ்ச்சி குறித்து எதிர்ப்புக் குரல்களும் கிளம்பின. இதனால், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்நிலையில், வேறொரு தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நடத்தப் போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் எனத் தகவல் பரவியது. ஆனால், அது பொய்யான தகவல் என அவர் மறுத்துள்ளார்.
“வேறொரு சேனலில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்காக நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகப் புரளிகள் உலவுகின்றன. வேறெந்த சேனலிலும் நான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.
அந்த நிகழ்ச்சிக்காக என்னால் முடிந்த சிறந்த பணியைச் செய்தேன். அந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது. ஜீ தமிழுடன் அற்புதமான காலம். மற்ற சேனல்கள் என்னை அணுகுகின்றனர். ஆனால், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நான் நடத்தமாட்டேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.